டெல்லி காங். தலைவராக பதவியேற்றார் ஷீலா தீட்சித்.. ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என அறிவிப்பு
Recommended Video
டெல்லி: டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில தலைவராக பதவி வகித்து வந்தவர், அஜய் மக்கான். உடல் நலக்குறைவு காரணமாக, சமீபத்தில் இவர் பதவி விலகினார். இதையடுத்து, டெல்லி முன்னாள் முதல்வரான 80 வயதாகும் ஷீலா தீட்சித், புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில் ஷீலா தீட்சித் பதவியேற்றுக்கொண்டுள்ளார். தேவேந்தர் யாதவ், ஹரூண் யூசுப் மற்றும் ராஜேஷ் லிலோத்யா ஆகிய 3 பேர், அதே நிகழ்ச்சியின்போது, புதிய செயல் தலைவர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த விழாவில், கட்சியின் மூத்த தலைவர்கள் கரண் சிங், ஜனார்த்தன் திவேதி, மீரா குமார், அஜய் மக்கான், ஜெகதீஷ் டைட்லர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு குற்றவாளியான ஜெகதீஷ் டைட்லர் இந்த நிகழ்ச்சியில் முதல் வரிசையில் அமர்ந்து பங்கேற்றது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, லோக்சபா தேர்தலின்போது, டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற முழு முயற்சியுடன் பணியாற்றும் என்று ஷீலா தீட்சித் கூறினார். மேலும், ஆம் ஆத்மி கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்றும், தனிப்பட்ட முறையில் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்றும், அவர் தெரிவித்தார்.