தொடர்ந்து மூன்று முறை முதல்வர்.. டெல்லியின் முகத்தையே மாற்றினார்.. இரும்பு பெண்மணி ஷீலா தீட்சித்
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப்பை சேர்ந்தவருமான ஷீலா தீட்சித் 3 முறை டெல்லி முதல்வராக இருந்தவர். அதிக காலம் முதல்வராக இருந்தவர்களுள் இவரும் ஒருவராவார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் 1938-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் காபூர்தலாவில் பிறந்தார். அவர் கடந்த 1998-ஆம் ஆண்டு டெல்லி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, தொடர்ந்து 3 முறை ,அதாவது 2013-ஆம் ஆண்டு வரை அவர் அப்பதவியில் நீடித்தார். டெல்லியில் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற ஷீலா தீட்சித்தான் காரணமாக இருந்தார். இதையடுத்து நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜரிவால் ஷீலா தீட்சித்தை தோற்கடித்து முதல்வராக பதவியேற்றார். அதுவும் வெறும் 25,864 வாக்குகளில் தோல்வி அடைந்தார் ஷீலா.
அமைச்சர்
1986 முதல் 1989-ஆம் ஆண்டு வரை ராஜீவ்காந்தி அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பின்னர் பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
தோல்வி
இந்த நிலையில் இவர் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவியேற்றார். இவர் அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
உயிர் பிரிந்தது
2014-ஆம் ஆண்டு கேரள ஆளுநராகவும் பணியாற்றிய ஷீலா தீட்சித், 5 மாதங்களிலேயே ராஜினாமா செய்தார். இவர் அனைத்து கட்சியினராலும் பாராட்டப்படுவர் ஆவார். இவருக்கு இன்று காலை உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 81 ஆகும்.
ஆர்ப்பாட்டம்
அண்மையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதை எதிர்த்து அவரது வீட்டின் முன் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஷீலா தீட்சித் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ஷீலா பெயர்
அது போல் சில சர்ச்சைகளும் ஷீலா தீட்சித்தை சுற்றி வட்டமடித்துள்ளன. கடந்த 2009-ஆம் ஆண்டு ஜெசிக்கா லால் கொலை வழக்கு குற்றவாளிக்கு பரோல் கொடுத்தது, கடந்த 2010-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் முறைகேடு உள்ளிட்டவைகளில் ஷீலாவின் பெயர் அடிப்பட்டது.
முன்னாள் எம்பி
சுதந்திர போராட்டத் தியாகியும் முன்னாள் மேற்கு வங்க கவர்னருமான உமாசங்கர் தீட்சித்தின் மகன் வினோத் தீட்சித்தை திருமணம் செய்து கொண்டார். மனைவி, குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்த வினோத் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர்களுக்கு சந்தீப் தீட்சித் மற்றும் லத்திகா சையது ஆகிய மகன், மகள் உள்ளனர். அதில் சந்தீப் கிழக்கு டெல்லியின் முன்னாள் எம்பியாவார்.