விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு.. ராஜ்யசபாவில் கடுமையாக எதிர்த்த ஷிரோமணி அகாலி தளம்.. பெரும் அமளி!
டெல்லி: விவசாயம் தொடர்பாக மத்திய அரசின் மசோதாக்களை பாஜகவின் கூட்டணியில் இருக்கும் ஷிரோமணி அகாலி தளம் கடுமையாக எதிர்த்து உள்ளது.இதனால் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஷிரோமணி அகாலி தளம் கட்சி நீடிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) மசோதா, 2020, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020, அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2020 ஆகிய மசோதாக்கள் பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்தித்து உள்ளது.
இந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட போதே, பெரிய அளவில் மசோதா எதிர்ப்புகளை சந்தித்தது. இந்த மசோதாவிற்கு ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இதனால் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் ராஜ்யசபாவில் இந்த மசோதாவை ஷிரோமணி அகாலி தளம் கடுமையாக எதிர்த்து உள்ளது. ராஜ்யசபாவில் பேசிய எஸ்ஏடி எம்பி நரேஷ் குஜ்ரால், பாஜகவின் விவசாய விரோத போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது. விவசாயிகளை முட்டாள் என்று பாஜக நினைக்கிறது. அவர்களை இப்படி பாஜக குறைவாக மதிப்பிட கூடாது.
பாஜக கூட்டணியில் பல காலமாக இருக்கிறோம்.ஆனால் இனியும் பாஜகவின் இது போன்ற சட்டங்களை ஆதரிக்க முடியாது. இந்த மசோதாவை எங்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. விவசாயத்தை அழிக்கும் இந்த மசோதாவை எதிர்த்து எப்போதும் நாங்கள் மக்கள் பக்கம் நிற்போம் என்று எஸ்ஏடி கட்சி குறிப்பிட்டுள்ளது.
இந்த மசோதாவிற்கு எதிராக இந்த ராஜ்யசபாவில் கடுமையான விவாதங்கள், வாக்கு வாதம், அமளி ஏற்படாதது. இந்த மோதல் காரணமாக பாஜக கூட்டணியில் எஸ்ஏடி இருக்குமா என்று வரும் நாட்களில் தெரிந்து விடும் என்கிறார்கள். பெரும் அமளிக்கு இடையே இன்று மசோதா ராஜ்யசபா நிறைவேறியது.