25 வருஷத்துக்கு வாக்குரிமை தரக்கூடாது.. இந்து-முஸ்லீம் பிரிவினைக்கு வழிவகுக்கும்.. சிவசேனா தாக்கு
டெல்லி: குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருப்பதை கடுமையாக விமர்சித்த சிவசேனா கட்சி, இது இந்தியாவில் வாக்கு வங்கி அரசியலை அதிகரிக்கவே வழிவகுக்கும் என பாஜக அரசை சாடியுள்ளது.
குடியுரிமை (திருத்த) மசோதா இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே "கண்ணுக்கு தெரியாத பிரிவினைக்கு" வழிவகுக்கும் என்று சிவசேனா எச்சரித்துள்ளது.
வாக்கு வங்கி அரசியலைத் தடுக்க 25 ஆண்டுகளுக்கு புதிதாக குடியுரிமை பெறுபவர்களின் வாக்குரிமையை ரத்து செய்யுமாறு மத்திய அரசை சிவசேனா வலியுறுத்தி உள்ளது. அத்துடன் குடியுரிமை திருத்த மசோதா நாட்டு மக்களுக்கு நல்லதல்ல என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது.
வாக்குவங்கி
பாஜகவின் முன்னாள் கூட்டாளியான சிவசேனா கட்சி குடியுரிமை (திருத்த) மசோதா குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. அந்த கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் குடியுரிமை திருத்த மசோதாவின் நோக்கம் வாக்கு வங்கியை உருவாக்குவதுதானான என்று கேள்வி எழுப்பியுள்ளதோடு இது நாட்டுக்கு நல்லதல்ல என்று தெரிவித்துள்ளது.
சிவசேனா அச்சம்
சட்டவிரோதமாக குடியேறிவர்களை ஏற்கும் விஷயத்தில் குறிப்பிட்ட சிலரை மட்டும்ஏற்றுக்கொள்வது என்பது நாட்டில் ஒரு மத போருக்கு தூண்டுதலாக அமைந்துவிடுமோ என அஞ்சுவதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
இந்து முஸ்லிம்
இந்த மசோதா இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே "கண்ணுக்கு தெரியாத பிரிவினைக்கு" வழிவகுக்கும் என்றும் சிவசேனா கட்சி மத்திய அரசை கடுமையாக எச்சரித்துள்ளது.
நாட்டு நலன்
இந்த மசோதா நாட்டின் சிறந்த நலனுக்கு எதிரான "வாக்கு வங்கி அரசியலை" ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
சர்ச்சை நடவடிக்கை
இன்றை சூழலில் இந்த மசோதாவை தாக்கல் செய்வதன் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பிய சிவனோ. இந்தியா தற்போது ஏராளமான பல சிக்கல்களை சந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில், குடியுரிமை திருத்த மசோதா மற்றொரு சர்ச்சைக்குரிய நடவடிக்கையாக மாறும் என்றும் எச்சரித்துள்ளது.
எதிர்க்கின்றன
பீகார் மற்றும் மேற்கு வங்காளத்துடன் வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாநிலங்கள் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்க்கின்றன என்பதையும் சிவசேனா கூறியுள்ளது.
வாக்களிக்கும் உரிமை
இதனிடையே சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தனது டுவிட்டர் பக்கத்தில் "சட்டவிரோத ஊடுருவும் நபர்களை வெளியேற்ற வேண்டும். அதேநேரம் புலம்பெயர்ந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும், ஆனால் அமித் ஷா, வாக்கு வங்கியை உருவாக்கிய குற்றச்சாட்டுகளுக்கு முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.