காங்கிரசுடன் கூட்டணி.. லோக்சபாவில் பாஜகவுக்கு ஆதரவு.. ராஜ்யசபாவில் யூ டர்ன்.. சிவசேனா நிலையை பாருங்க
டெல்லி: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளபோதிலும், லோக்சபாவில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக சிவசேனா வாக்களித்துள்ளது.
காங்கிரஸ் மட்டுமின்றி, மகாராஷ்டிராவில் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியும்கூட, இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்து இருந்த நிலையில், சிவசேனா மட்டும் தனியே தனது பழைய பங்காளியான பாஜகவின் பாதையில் பயணித்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் அல்லாத பிற மதப் பிரிவினர் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது. எனவே இதனை முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் என்று வர்ணிக்கின்றன எதிர்க்கட்சிகள்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா!
குறைந்தபட்ச பொது செயல் திட்டம்
தீவிர இந்துத்துவா கட்சியாக அறியப்பட்டு வரும் சிவசேனா, மகாராஷ்டிராவில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. அப்போது ஏற்படுத்தப்பட்ட குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில், மதச்சார்பின்மை பாதுகாக்கப்படும் என்ற ஒரு ஷரத்து இடம்பெற்றுள்ளது.
நாட்டு நலன்
இது குறித்து சிவசேனா கட்சியின் எம்பி ஒருவர் டிவி சேனலிடம் கூறுகையில், தேசத்தின் நலனுக்காக இவ்வாறு ஒரு முடிவு எடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என்று கூறினார்.
ராஜ்யசபாவில் வேறு முடிவு
அதேநேரம் சிவசேனா கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், ராஜ்யசபாவில் இந்த சட்டத்துக்கு எதிராக எங்கள் கட்சி வாக்களிக்கும் என்று தெரிவித்து உள்ளார்.
நாளை தாக்கல்
லோக்சபாவில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் சட்டத்தை எளிதாக நிறைவேற்ற முடிந்தது. ஆனால் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் தயவு தேவைப்படும் நிலையில், சிவசேனா இந்த முடிவை எடுத்துள்ளது. சட்ட திருத்த மசோதா, நாளை, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.