ஆதித்ய தாக்ரேதான் முதல்வர்.. நெருக்கும் சிவ சேனா எம்எல்ஏக்கள், சரத் பவார் பஞ்ச் வேற! பாஜக மூவ் என்ன?
டெல்லி: இத்தனை நாட்களாக, சிவசேனா தொண்டர்கள் தான் சொல்லிக்கொண்டிருந்தனர்.. இப்போது அந்த கட்சியின் எம்எல்ஏக்களும், ஆதித்ய தாக்கரேதான் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
288 சட்ட சபை உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிராவில், கடந்த 21ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், பாஜக 105 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது.
ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 145 எம்எல்ஏக்களாவது தேவை என்பதால் சிவசேனா, மனது வைக்காமல் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது. எனவே தங்கள் கோரிக்கைகளை வலுவாக்கி கொண்டே செல்கிறது சிவசேனா.
போஸ்டர்கள்
கட்சியின் தொண்டர்கள் சிவசேனா கட்சித் தலைவரான உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவை முதல்வராக வேண்டும் என்று கூறி போஸ்டர் அடித்து ஒட்டினர். மறைந்த பால் தாக்கரேவின் பேரனும், உத்தவ் தாக்கரே மகனுமான, ஆதித்ய தாக்ரே, ஓர்லி, தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தாக்கரே குடும்பத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மக்கள் பிரதிநிதி என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
உத்தவ் தாக்ரே
இந்த நிலையில் அரசு அமைப்பதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. சிவசேனா எம்எல்ஏக்களும், ஆதித்ய தாக்கரேவை, முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுடன் உத்தவ் தாக்கரே சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆதித்ய தாக்கரேதான், முதல்வராக வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
எம்எல்ஏக்கள்
இது தொடர்பாக, 'தானே' சட்டசபை தொகுதி எம்எல்ஏவான பிரதாப் சர்நாயக் கூறுகையில், எங்களுடனான ஆலோசனையின் போது, பாஜக மற்றும் சிவசேனா நடுவே சரிசமமாக அதிகார பங்கீடு செய்யப்பட வேண்டும் என்றும், இரண்டரை ஆண்டு காலம் சிவசேனா கட்சியை சேர்ந்தவரும், இரண்டரை ஆண்டுகாலம் பாஜகவை சேர்ந்த ஒருவரும், முதல்வராக இருக்கலாம் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். ஆனால் எங்களைப் பொறுத்த அளவில் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு தர வேண்டும், அதிகாரப்பகிர்வில் சரி பங்கு தேவை. இதுதொடர்பாக, முடிவெடுக்க உத்தவ் தாக்கரேக்கு, நாங்கள் முழு அதிகாரம் கொடுத்துள்ளோம். அவர் என்ன முடிவெடுக்கிறாரோ, அதற்கு கட்டுப்படுவோம் என்று தெரிவித்தார்.
பதவியேற்பு
தீபாவளி பண்டிகை முடிவடைந்த பிறகு, பாஜக மற்றும் சிவ சேனா ஆகிய இரு கட்சிகளும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பான இறுதி முடிவுக்கு வரக்கூடும் என்று தெரிகிறது. அக்டோபர் 31-ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் வாய்ப்பு இருப்பதாகவும் மும்பையில் இருந்து வரக்கூடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவசேனாவுக்கு வாய்ப்பு
ஒருவேளை சிவசேனாவின் முதல்வர், கோரிக்கையை பாஜக புறக்கணித்தால், அந்த கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் சேர்ந்து கூட கூட்டணி, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது. காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இவர்களுடன் 56 தொகுதிகளை வென்ற சிவசேனாவும் சேர்ந்தால், எளிதாக ஆட்சி அமைத்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சரத் பவார் பேட்டி
இதனிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் இன்று அளித்த பேட்டியில், சிவசேனா சம பங்கு வேண்டும் என்று கேட்பதில் எந்த தவறும் கிடையாது. 1990களில் கூட சிவசேனா மற்றும் பாஜக நடுவே சரிபாதி அதிகாரப் பங்கீடு தான் இருந்தது, என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்து பாஜகவிற்கு இன்னும் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.