ராகுல் விலகலை கிண்டல் செய்யும் சிவசேனா... 'காந்தி' குடும்ப வேரையே சாய்த்து விட்டார் மோடி
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தியை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்களில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தொடர்ந்து மூன்று முறை வென்ற உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார். 2- வது தொகுதியாக அவர் களம் இறங்கிய கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வென்று நாடாளுமன்றம் சென்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது. ஒட்டுமொத்த இடங்களில் 10 சதவீதத்தை விட, கூடுதல் இடங்களில் வெல்லவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் பிரதான எதிர்க் கட்சி அந்தஸ்தும் கிடைக்கவில்லை.
நேரு, இந்திரா, சஞ்சய், ராஜீவ், சோனியா என்று தொன்று தொட்டு வந்த பாரம்பரியம் தோல்வியால் துவண்டு போயுள்ளது. இதனால், விரைவில் மீண்டும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, சோனியா குடும்பத்திற்கு விசுவாசமான புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்தும் இடம்: கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
இந்த நிலையில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், முதன் முறையாக குடும்ப அரசியலில் இருந்து காங்கிரஸ் விடுபட்டு புதிய தலைவரை தேர்வு செய்ய இருப்பதாக கூறியுள்ளார். 'காந்தி' குடும்ப வேரையே, மோடி சாய்த்து , ஆட்டம் காண வைத்துள்ளார் என்றும் விமர்சனம் செய்தார். அதே சமயம், காங்கிரஸ் தன்னை மீண்டும் வேரூன்றி வளரச் செய்யும் ஆற்றல் உடைய கட்சி எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆளாளுக்கு கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர். வீரப்ப மொய்லி மற்றும் மணிசங்கர் அய்யர் போன்ற தலைவர்கள் காந்தி குடும்பத்தினர் அல்லாத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.