ராகுல், பிரியங்காவை பாராட்டித் தள்ளிய சிவசேனா... அதிர்ச்சியில் பாஜக கூடாரம்!
Recommended Video
லோக்சபா தேர்தல் பணிகளில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி சிறப்பாக பணியாற்றினர் என்று பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா பாராட்டு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவில் பாஜக மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. இன்று முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில், பாஜக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்துள்ளன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணிக்கு 300 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று தெரிவிக்கின்றன. இதனால், அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குலைக்கும் செயல் என குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.
இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா கட்சியின் சாமனா நாளிதழில் ராகுல், பிரியங்கா காந்தியின் தேர்தல் பணிகள் குறித்து பாராட்டி எழுதப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது," மஹாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணி வரலாற்று வெற்றியை பதிவு செய்யும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார். இதனை யாரும் கணித்து ஆருடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. இதுதான் கள நிலவரம்.
காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகள் தோல்வியை தழுவும். எனினும், தேர்தல் முடிவு வரும் வரை காத்திருப்போம். ஆனால், இந்த தேர்தலில் ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கடுமையாக உழைத்தனர்.
இதனால், சென்ற தடவை போல அல்லாமல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடிக்கும். எதிர்க்கட்சி அந்தஸ்துக்கான போதிய இடங்களை பிடிக்கும். இது ராகுல் காந்தியின் வெற்றியாக கருதலாம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சி காங்கிரஸ் கட்சித் தலைவர்களை புகழ்ந்து பேசியிருப்பது பாஜக தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.