லாக்டவுனை மேலும் நீட்டிக்கக் கூடாது.. மோடியுடனான ஆலோசனையில் ஆட்சேபித்த ஒரே முதல்வர் சவுகான்
டெல்லி: கொரோனாவின் சமூகப் பரவலைத் தடுக்க லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என அனைத்து முதல்வர்களும் பிரதமரிடம் கோரிக்கை வைத்த நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் 7,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 250 பேர் பலியாகிவிட்டனர். இதனால் சமூக பரவலைத் தடுக்க அனைத்து முதல்வர்களும் தற்போது அமலில் உள்ள லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கடந்த சில தினங்களாக லாக்டவுன் நீட்டிப்பு குறித்து மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் அனைத்து மாநில முதல்வர்களுடனும் அவர் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அனைத்து முதல்வர்களும் லாக்டவுனை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர். சிலர் கொரோனா தடுப்பு நிதியை அதிகரிக்க கோரினர். ஆனால் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மட்டும் ஊரடங்கை நீட்டிக்கக் கூடாது என தெரிவித்தார்.
ரயில், சாலை, விமான போக்குவரத்துகள் எக்காரணத்தை கொண்டும் மீண்டும் இயங்க அனுமதிக்கக் கூடாது என முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் 10 நாட்களில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து 6 அடுக்கு திட்டம் உருவாக்கப்பட்டது. மாவட்டத்தை தனிமைப்படுத்துதல், ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு சீல், வீடு வீடாக சென்று சோதனை, 4 அடுக்கு கான்டாக்ட் டிரேசிங் முறை, மக்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களால் அந்த மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை.
அதாவது ஊரடங்கை கடுமையாக்குவதே பில்வாரா மாடலாகும். கொரோனா பாதித்த மாவட்டங்களில் பில்வாரா மாடலை கொண்டு வர யோசனைகள் வழங்கப்பட்டன. ஒடிஸா, ராஜஸ்தான், பஞ்சாப்பில் ஏற்கெனவே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தைக் காட்டிலும் உயிர்களே முக்கியம் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.