அதெப்படி சாவர்க்கரை விமர்சிக்கலாம்? இப்ப ராகுல் காந்தி மீது சிவசேனா காட்டம்
டெல்லி: வீர சாவர்க்கரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருப்பதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த மசோதா விவகாரத்தில் சிவசேனாவின் இரட்டை நிலைப்பாட்டினால் காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. லோக்சபாவில் குடியுரிமை திருத்த மசோதாவை சிவசேனா ஆதரித்து வாக்களித்தது.
இதற்கு தமது ட்விட்டர் பக்கத்தில் மிகக் கடுமையான விமர்சனத்தை ராகுல் காந்தி முன்வைத்திருந்தார். இதனையடுத்து ராஜ்யசபாவில் குடியுரிமை மசோதாவை ஆதரிக்காமல் அதேநேரத்தில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது சிவசேனா.
இதுவும் மிகவும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய ராகுல் காந்தி, ரேப் இன் இந்தியா விவகாரத்தில் மன்னிப்பு கேட்க தமது பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல; ராகுல் காந்தி என காட்டமாக பேசினார். சுதந்திர போராட்ட காலத்தில் வீர சாவர்க்கர், ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுவதை சுட்டிக்காட்டியே ராகுல் இவ்வாறு பேசியிருந்தார்.
இதனால் சிவசேனா இப்போது ராகுல் காந்தி மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளது. சிவசேனாவின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் இது பற்றி கூறியதாவது:
வீர சாவர்க்கர், மகாராஷ்டிராவுக்கும் அல்ல.. ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே முன்மாதிரியான தலைவர். இந்த தேசத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவர் நேரு, காந்தியைப் போலவே இந்த தேசத்துக்காக வீர சாவர்க்கரும் தியாகம் செய்துள்ளார். தேசத்தின் தலைவர்கள் ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டும். இதில் எந்த சமரசமும் இல்லை என்றார்.