10 மடங்கு அதிகரித்த கொரோனா உயிரிழப்பு.. சிறு, சிறு மாநிலங்களில் அதிகம்.. ஷாக் தரும் ரிப்போர்ட்!
டெல்லி: இந்தியாவின் ஜார்கண்ட், உத்தரகாண்ட், ஹரியானா உள்ளிட்ட சிறு, சிறு மாநிலங்களில் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து விஸ்வரூபத்தில் சென்று கொண்டிருப்பது கவலையை ஏற்படுத்தி வருகிறது.
கைகொடுத்த லாக்டவுன்... கொரோனாவிற்கு 3.29 லட்சம் பேர் பாதிப்பு - 3.56 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்
கடந்த எப்ரல் மாதத்தில் மட்டும் புதிய பாதிப்புகளின் தினசரி எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது தினமும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
10 மடங்கு அதிகரிப்பு
நாட்டின் தினசரி உயிரிழப்பும் ஏப்ரல் மாதத்தில் 10 மடங்கு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாளைக்கு சுமார் 400 ஆக இருந்த உயிரிழப்பு தற்போது ஒரு நாளைக்கு 4,000-க்கும் அதிகமாக உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தினமும் அதிகபட்ச இறப்புகளைப பதிவு செய்து வரும் நிலையில் மற்ற சிறு மாநிலங்களிலும் உயிரிழப்புகள் விரைவாக அதிகரித்து வருவது கவலைக்குரிய அம்சமாகும்.
மகாராஷ்டிரா முதலிடம்
ஜார்கண்ட், ஹரியானா, சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த மார்ச் மாத இறுதியில், நாட்டில் நடந்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கை மகாராஷ்டிரா பங்களித்து வந்தது. ஆனால் தற்போது மகாராஷ்டிராவில் அந்த பங்கு ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே. ஏனெனில் சிறு, சிறு மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகம் பதிவானதே இதற்கு காரணமாகும்.
சிறு, சிறு மாநிலங்கள்
கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் கடந்த 40 நாட்களில் ஏராளமான கொரோனா வைரஸ் இறப்புகளை பதிவு செய்தன. கர்நாடகா தற்போது தினமும் 400-க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்து வருகிறது, அதே வேளையில் டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் தினசரி உயிரிழப்புகளின் எண்ணிக்கை தலா 300 ஆகும். இது தவிர தினமும் 100-க்கும் மேற்பட்ட இறப்புகளை பதிவு செய்யும் ஒரு டஜன் மாநிலங்கள் இப்போது உள்ளன. உத்தரகண்ட், ஹரியானா, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இந்த பட்டியலில் உள்ளன.
உத்தரகண்ட்டில் அதிவேகம்
உதாரணமாக உத்தரகண்ட் மாநிலத்தில் ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை ஒற்றை இலக்கங்களில் இறப்புகள் பதிவாகின. அதன் பின்னர் தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்தது. உத்தரகாண்டின் 3,700 இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை கடந்த ஒரு மாதத்தில் நிகழ்ந்துள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை பதிவான உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட 70 சதவீதம், அதாவது 3,853 பேரில் 2,678 பேர் கடந்த ஒரு மாதத்தில் இறந்துள்ளனர்.
பாதிக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்
பீகார், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் கடந்த மாதத்தில் பாதிக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை அதிகாரப்பூர்வ எண்கள் மட்டுமே. இந்த மாநிலங்களில் பதிவு செய்யப்படாத இறப்புகள் அதிகம் உள்ளன என்றும் இங்கு உயிரிழப்புகள் மேலும் அதிகமாக இருக்கக் கூடும் என்றும் அதிர்ச்சி தரவுகள் கூறுகின்றன.