சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி.. விமான ஒழுங்குமுறை அமைப்பு நோட்டீசால் பரபரப்பு
டெல்லி: சென்னை மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களின் இயக்குநர்களுக்கு விமான ஒழுங்குமுறை அமைப்பான டி.ஜி.சி.ஏ இன்று, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாதுகாப்பு தரத்தை பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை, உட்பட பல விமான நிலையங்களை இந்த மாத தொடக்கத்தில் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) அதிகாரிகள் இம்மாத துவக்கத்தில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, சென்னை, அகமதாபாத் ஏர்போர்ட்டுகளில், பாதுகாப்பு குறைபாடுகள், விதிமுறை மீறல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, சென்னை மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களின் இயக்குநர்களான ஜி. சந்திரமவுலி மற்றும் மனோஜ் கங்கல் ஆகியோருக்கு இன்று நோட்டீஸ் வழங்கப்பட்டன. 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று, பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
"இரு விமான நிலையங்களிலும்" பாதுகாப்பான விமான போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான விஷயங்கள் பராமரிக்கப்படவில்லை" என்று நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மும்பை உட்பட பல விமான நிலையங்களில் விமானங்களை தரையிறக்கும் சூழ்நிலையில் விபத்துகள் அதிகரித்து வருின்றன.
மும்பை விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை மழையால், சமீபத்தில் மூன்று நாட்களுக்கு மேலாக மூடப்பட்டது. ஜெய்ப்பூரிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் மும்பைக்கு ஜூலை 1ம் தேதி இரவு தரையிறங்கும் போது ஓடுபாதையிலிருந்து நழுவி விபத்துக்குள்ளானது. இந்த நிலையில்தான், பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.