கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் பாஜக- உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பு வாதம்
டெல்லி: கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் பாஜக உள்ளது என்றும் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞரான அபிஷேக் சிங்வி உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்தார்.
கர்நாடக சட்டசபையில் இருந்து 15 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் மறுக்கும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 15 எம்எல்ஏக்கள் சார்பில் முகுல் ரோத்தகியும் சபாநாயகர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும் ஆஜராகி வாதாடி வருகின்றனர்.
இதனால் விவாதம் காரசாரமாக நடைபெறுகிறது. அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பு சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதம் செய்தார்.
ராஜினாமா செய்த கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏக்களை சட்டசபைக்கு அழைப்பது எப்படி சரி? முகுல் ரோத்தகி
ஆஜர்
ஒரு கட்சியை பிடிக்காமல்தான் ராஜினாமா செய்கின்றனர். விரும்பாத ஒரு கட்சியின் கொறடா உத்தரவை எப்படி மதிக்க முடியும்? என வாதிட்டார். இதைத் தொடர்ந்து கர்நாடகா சபாநாயகர் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக்மனு சிங்வி ஆஜராகி வாதம் செய்தார்.
விசாரணை
அப்போது அவர் கூறுகையில் தகுதி நீக்கம் என்பது கொறடாவை மீறும் செயலாகும். 15 எம்எல்ஏக்களில் 11 பேர் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனனர். இன்னும் 4 பேர் சபாநாயகரை சந்திக்கவேயில்லை. அரசியலமைப்பு சட்டம் 190-விதிப்படி ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் விசாரணை நடத்துவதே முதல் நடவடிக்கையாகும். அது கடந்த 11-ஆம் தேதியே நடந்துவிட்டது.
தகுதிநீக்கத்திலிருந்து
எனவே தகுதி நீக்கம் குறித்து சபாநாயகர்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதை ஆணித்தரமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன். தகுதி நீக்கத்தை அவர்கள் தவிர்க்க எப்படி ராஜினாமா செய்யலாம்? ராஜினாமா என்பது தகுதிநீக்கத்திலிருந்து தப்பிக்கும் வழியாகாது.
முடிவெடுக்க வேண்டும்
சட்டரீதியிலான ராஜினாமா என்பது நேரில் சமர்ப்பிப்பதாகும். கடந்த ஜூலை 11ஆம் தேதிதான் எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை நேரடியாக கொடுத்துவிட்டனர். ஆனால் தகுதி நீக்கம் என்பது ஏற்கெனவே நடந்துவிட்டது. எனவே அதுகுறித்து சபாநாயகர்தான் முடிவெடுக்க வேண்டும்.
தகுதி நீக்கம்
ஒரு வேளை நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் போவதாக வைத்துக் கொள்வோம். ஆனால் ஒரு எம்எல்ஏ இன்றைய தினம் ராஜினாமா செய்ய விரும்பினால் அது ஆட்சியை கவிழ்க்க வழிவகுக்கும். எனவே ராஜினாமா என்பது தகுதிநீக்கம்தான். இதனால் இது ஒரு தகுதி நீக்கம் வழக்கு ஆகும் என்றார் சிங்வி.
மனுதாக்கல்
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சபாநாயகரை சந்திக்க நேரம் கிடைக்காததால்தான் எம்எல்ஏக்கள் நீதிமன்றத்துக்கு வருகின்றனர்? என கேள்வி எழுப்பினார். அப்போது சிங்வி கூறுகையில் இது உண்மையில் தவறான புகாராகும். எம்எல்ஏக்கள் தன்னை சந்திக்க நேரம் கேட்கவில்லை என சபாநாயகர் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துள்ளார் என்றார் சிங்வி.
முடிவெடுங்கள்
ராஜினாமா குறித்து நீங்கள் ஏன் முடிவு செய்யவில்லை என ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பினார். அதற்கு சிங்வி, ராஜினாமாவையும் தகுதி நீக்கத்தையும் முழுமையாக ஆராய்ந்து வருகிறோம். இரண்டில் எது சிறந்ததோ அதை செய்வோம் என்றார். அப்படியெனில் ராஜினாமாவை ஏற்பது குறித்து முடிவெடுங்கள் என்றார் கோகாய்.
ராஜினாமா
கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் பாஜக உள்ளது. சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. எனவே சபாநாயகர் கோரியபடி ராஜினாமா மீது முடிவெடுக்க நாளை வரை காலஅவகாசம் வழங்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் சிங்வி கோரிக்கை விடுத்தார்.