தமிழகம் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல்.. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை
டெல்லி: தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று அமலுக்கு வந்துள்ளன. கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத் தேர்தலும் அன்றைய தினம்தான் அறிவிக்கப்படுகிறது.
Recommended Video
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை 4.30 மணிக்கு தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
அப்போது, பிற தேர்தல் ஆணையர்களும் உடனிருந்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலத்தில் தேர்தல் நடத்தைவிதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
தேர்தலை சுமூகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. பீகார் தேர்தலை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் உள்ளது.
தமிழக தேர்தல் பார்வையாளராக தேவேந்திர குமார் நியமனம் என்ற ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார். தமிழக செலவீன பார்வையாளராக
பாலகிருஷ்ணன் மற்றும் மது மாதன் நியமனம் செய்யப்படுவார்கள். ஆர்.கே.நகர், வேலூர் தொகுதிகளில் தேர்தல் ரத்தாக காரணம் பணம் அதிகம் செலவிடப்பட்டதுதான். எனவே தமிழகத்தில் செலவீன பிரச்சினை அதிகம்.
தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 44 தனித்தொகுதிகள் தனித் தொகுதிகள். 2 தொகுதிகள் பழங்குடியினருக்கானவை. தமிழகத்தில் 88 ஆயிரத்து 936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது 34.6 3% கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட உள்ளன. ஒரு வாக்குச் சாவடியில் 1,000 வாக்காளர் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும்.
மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19ம் தேதி. வேட்புமனு பரிசீலனை மார்ச் 20ம் தேதி நடைபெறும். வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 22ம் தேதி கடைசி நாளாகும்.
ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 5 மாநிலங்களிலும், மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இவ்வாறு சுனில் அரோரா தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்ய சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழு வருகை தந்தபோது அனைத்துக் கட்சிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.