சட்டமான விவசாய மசோதாக்கள்.. விவசாயிகளுக்கும் ஜனநாயகத்திற்கும் கருப்பு தினம்.. அகாலி தளம் விமர்சனம்
டெல்லி: விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கும் ஜனநாயகத்திற்கும் கருப்பு தினம் என அகாலிதளம் விமர்சித்துள்ளது.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறியது.
மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்த போதே 24 ஆண்டு கால கூட்டணி கட்சியாக இருந்த சிரோமணி அகாலிதளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் இந்த மசோதா நிறைவேறியது.
இதையடுத்து மத்திய அமைச்சராக இருந்த ஹர்சிம்ராத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அக்கட்சியினர் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனிடையே இந்த மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேறியது.
இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது. இதையடுத்து அந்த மசோதா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறுகையில் விவசாயிகளின் வேதனையையும் பஞ்சாபியர்களின் அழுகுரலையும் கேட்க மறுத்து மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தது வேதனை அளிக்கிறது.
புதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..!
ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி மசோதா, விவசாய மசோதா உள்ளிட்டவைகளுக்கு ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர் பஞ்சாபியை அலுவல் மொழியாக அங்கீகரிக்க மறுத்துவிட்டார். விவசாய மசோதாக்களுக்கு எதிராக தேசத்தின் ஒருமித்த கருத்தை ஏற்று குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை திருப்பி அனுப்புவார் என நம்பியிருந்தோம். உண்மையில் ஜனநாயகத்திற்கும் விவசாயிகளுக்கும் இது கருப்பு நாளாகும் என்றார்.
இதுகுறித்து ஹர்சிம்ராத் கவுர் கூறுகையில் ஜனநாயகத்திற்கு கருப்பு தினமாகும். விவசாய மசோதாவை திருப்பி அனுப்ப 18 அரசியல் கட்சிகள் கோரியிருந்த நிலையில் குடியரசுத் தலைவர் ஏற்க மறுத்துவிட்டார் என கவுர் தெரிவித்துள்ளார். இந்த மசோதாக்களை எதிர்த்து செப்டம்பர் 25 ஆம் தேதி பாரத் பந்தும் நடத்தப்பட்டது.