குற்றவாளிகளுடன் கை கோர்த்து செயல்படும் புலனாய்வு குழு: ஹத்ராஸ் பெண் குடும்பம் குற்றச்சாட்டு
டெல்லி: உ.பி.யில் 19 வயது தலித் பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், அந்த பெண்ணின் குடும்பத்தாரை சந்திப்பதற்கு மீடியாக்கள் இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள அந்த கிராமத்துக்கு நுழைவதற்கு கடந்த சில நாட்களாக பத்திரிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இவ்வாறு வெளிப்படைத் தன்மை இல்லாமல் எதற்காக தடை விதிக்கப்படுகிறது? குற்றவாளிகளுடன் அரசு கைகோர்த்து உள்ளதா என்று எதிர்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்காத சம்பவத்திற்கு டெல்லி பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தன.
ஹத்ராஸ்.. செய்தி சேகரிக்கவிடாமல் நிருபர்களை தடுப்பது ஏன்? டெல்லி பத்திரிக்கையாளர் சங்கம் கேள்வி
உடலை கொடுக்கவில்லை
இந்த நிலையில் இன்று கிராமத்துக்குள் செல்வதற்கு பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் தாய் நிருபர்களிடம் கூறுகையில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது: எனது மகளின் உடலை எங்களிடம் தரவில்லை. நாங்கள் திரும்பத் திரும்ப உடலை தருமாறு போலீசாரிடம் கெஞ்சினோம். அப்படியிருக்கும்போது, எங்கள் அனுமதியோடு உடல் தகனம் செய்யப்படுவதாக கூறியது சுத்தப் பொய்.
உண்மை கண்டறியும் சோதனை
எங்களிடம் நார்கோ எனப்படும் உண்மை கண்டறியும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீசார் கூறுகிறார்கள். அப்படி என்றால் என்ன என்று எங்களுக்கு தெரியாது. நாங்கள் எப்போதுமே வாக்குமூலத்தை மாற்றி கூறவில்லை. ஒரே மாதிரிதான் கூறுகிறோம். எங்களுக்கு எதற்கு உண்மை கண்டறியும் பரிசோதனை என்பது புரியவில்லை. மாவட்ட கலெக்டருக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் அந்த சோதனையை செய்யுங்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணை
மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழு, குற்றவாளிகளுடன் கை கோர்த்துக் கொண்டு செயல்படுகிறது. சிபிஐ விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டும். இதுவரை சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த யாருமே எங்களிடம் விசாரணை நடத்தவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வேறு உடல்
உயிரிழந்த பெண்ணின், அண்ணி அளித்த பேட்டி: எனது நாத்தனார் உடல் எரிக்கப் படவில்லை என்று சந்தேகப்படுகிறோம். அது எங்கோ பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டுள்ளது. யாருடைய உடல் எரியூட்டப்பட்டது என்பது பற்றி காவல் துறை விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.