கோடீஸ்வரர்களின் பார்ட்டி.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தை விமர்சித்த சீதாராம் யெச்சூரி
டெல்லி: சர்தார் படேல் என்றிருந்த கிரிக்கெட் மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று பெயர் மாற்றப்பட்டதை சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டமைக்கப்பட்டுள்ள மோட்டேரா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் (பிப்.24) தொடங்கியது.
800 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டியெழுப்பப்பட்ட இந்த ஸ்டேடியம் அகமதாபாத்தில் உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த ஸ்டேடியத்தை திறந்து வைத்தார்.
63 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் ஒரே நேரத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்நிலையில், சர்தார் படேல் என்றிருந்த இந்த ஸ்டேடியத்தின் பெயர், நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக, பிட்சின் இரு முனைக்கும் ரிலையன்ஸ் என்ட் (Reliance End) மற்றும் அதானி என்ட் (Adhani End) என பெயர் மாற்றப்பட்டது சமூக தளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
சறுக்கிய ஸ்கூட்டர்.. தாமதிக்காத பாதுகாவலர்கள்.. தப்பித்த மம்தா பானர்ஜி
காங்கிரஸ் தலைவர்கள், 'இது சர்தார் வல்லபாய் படேலுக்கு' ஏற்படுத்தப்பட்ட அவமானம் என்று விமர்சித்தனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தனது ட்விட்டரில், அதானி, ரிலையன்ஸ் ஆகிய முனை கொண்ட ஸ்டேடியத்தின் படத்தை ஷேர் செய்து, இது நரேந்திர மோடி ஸ்டேடியம், இவை அதன் இரண்டு முனைகள் ... கோடீஸ்வரர்களின் பார்ட்டி நடந்து கொண்டிருக்கிறது (cronies ki pawri ho rahi hai) என்று பதிவிட்டுள்ளார்.
இப்போட்டியில் இந்திய அணி இரண்டே நாளில் வெற்றிப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.