பாலியல் சேட்டை.. விரட்டிய சிபிசிஐடி.. டேராடூனிலிருந்து தப்பியோடி, டெல்லியில் சிக்கிய சிவ சங்கர் பாபா
டெல்லி: பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் சாமியார் சிவசங்கர் பாபா டேராடூன் மருத்துவமனையில் இருந்து திடீரென தப்பி ஓடிய நிலையில், டெல்லியில் மடக்கிப் பிடித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை கேளம்பாக்கம் பகுதியில் சுமார் 64 ஏக்கரில் அமைந்துள்ளது சுஷில் ஹரி பள்ளி. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. தன்னை சாமியார் என்று அழைத்துக் கொண்ட இவரை நம்பி ஏராளமான சிஷ்யர்கள் உள்ளனர்.
இந்த நிலையில்தான் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியானது. சிவ சங்கர் பாபா அந்த பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தகவல்தான் அது.
சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார்.. அலை அலையாக டி.சி. வாங்கும் மாணவிகள்.. ஆசிரியர்களும் ராஜினாமா!
பாலியல் புகார்
சிவ சங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார்களை கொடுத்ததன் அடிப்படியில் மாமல்லபுரம் போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதேநேரம், சிவ சங்கர் உத்தரகாண்ட் மாநிலம் தப்பியோடிவிட்டதாக தகவல் கிடைத்தது. வெளி மாநிலங்களுக்கு போலீசார் செல்ல தேவையுள்ளதால் வழக்கு சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டது.
மருத்துவமனை
டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவ சங்கர் பாபா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நெஞ்சு வலி இருப்பதாக கூறி இப்படி போய் அவர் அட்மிட் ஆகிவிட்டார். எனவே, அவரை பிடித்து விசாரிப்பதற்காக சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேரடியாக டேராடூன் சென்று விட்டார்கள். ஆனால் இதை தெரிந்து கொண்டு அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
லுக் அவுட் நோட்டீஸ்
அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது .ஆனால், உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து நேபாளம் தப்பி செல்வதற்கு எளிதான வழி இருக்கிறது. எனவே அவர் நேபாளம் தப்பி செல்லாமல் இருப்பதற்காகவும், பிற மாநில எல்லையில் இருக்கக்கூடிய ஆசிரமங்களிலும் சிபிசிஐடி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தப்பியோட்டம்
அந்தந்த மாநில போலீசாரின் உதவியோடு இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமாக உத்தரகாண்ட் மாநிலத்திலும் டெல்லியிலும் ஆசிரமங்கள் பல இருக்கின்றன. அங்கு எங்காவது அவர் பதுங்கி இருக்கிறாரா என்பதை அறிந்துகொள்வதற்காக அந்த ஆசிரமங்களுக்கு சிபிசிஐடி போலீசார் விரைந்தனர். சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் அவர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இப்படி பல வகைகளில் செக் வைக்கப்பட்ட நிலையில், டெல்லியில் சிவ சங்கர் பாபா சிக்கியுள்ளார். அங்கு அவரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இன்று மாலையே அல்லது நாளை காலை, அவர் சென்னை அழைத்து வரப்படுவார். இங்கு வைத்து விசாரணை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.