இந்திய ராணுவ வீரரின் ஒரே அடியில் வெலவெலத்துப்போன மசூத் அசார்.. அதிகாரி வெளியிட்ட பரபர தகவல்
Recommended Video
டெல்லி: ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் இந்திய ராணுவ வீரரிடம் கன்னத்தில் அறை வாங்கி வெலவெலத்துப்போன ஒரு சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது.
புல்வாமாவில், சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் தீவிரவாத தாக்குதலில் பலியாகினர். இந்த தாக்குதலுக்கான பொறுப்பை பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு ஏற்றுள்ளது.
இந்த தீவிரவாத அமைப்பின் தலைவன் பெயர் மசூத் அசார். 1968ம் ஆண்டு பாகிஸ்தானின் பஹவல்புர் என்ற ஏரியாவில் பிறந்தவன்.
தீவிரவாதி
ஹர்குத்-அல்-அன்சார் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டு படிப்படியாக அந்த தீவிரவாத அமைப்பில் பெரிய பதவிக்கு வந்தான். இந்த தீவிரவாத அமைப்பு காஷ்மீரிலும் கிளை பரப்பியிருந்த காலகட்டம் அது. ஆனால், ஹர்குத் தீவிரவாத அமைப்பில் ஏற்பட்ட கோஷ்டி பூசலை தீர்த்து வைக்க, 1994ம் ஆண்டு, ஸ்ரீநகருக்கு போர்த்துக்கீசிய நாட்டின் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி மசூத் அசார் வந்தான். அங்கே தங்கியிருந்தபோது, ஆட்டோவில் சக தீவிரவாதியுடன் பயணித்துள்ளார். அப்போது வாகன தணிக்கையின்போது, பாதுகாப்புப் படையினரிடம், மசூத் அசார் சிக்கிக்கொண்டான்.
ஸ்ரீநகரில் சிக்கிய மசூத் அசார்
இதையடுத்து மசூத் அசாரை கைது செய்த ராணுவத்தினர் காஷ்மீர் சிறையில் அடைத்தனர். அங்கு விசாரணையை ஆரம்பித்த பிறகுதான், மசூத் அசார் எந்த அளவுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு முக்கியமானவன் என்பது தெரியவந்தது. அப்போது நடந்த விசாரணை குறித்து, இந்திய பாதுகாப்பு படையின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் அவினேஷ் மோகானானி இப்போது சுவாரசிய தகவலை தெரிவித்துள்ளார்.
ஒரே அடி
மசூத் அசாரை விசாரிப்பது உண்மையில் மிகவும் எளிதாக இருந்தது. இந்திய ராணுவ வீரர் ஒருவர் மசூத் அசார் கன்னத்தில் ஓங்கி ஒரு அடி கொடுத்தார். அந்த ஒரே அடியில் வெலவெலத்து போய்விட்டான் மசூத் அசார். அடிக்கு பயந்து, தீவிரவாத இயக்கம் எப்படி செயல்படுகிறது, அதனுடைய அடுத்த நடவடிக்கை என்ன என்பதை வரிசையாக தெரிவித்துவிட்டான்.
எளிதான தகவல்
பாகிஸ்தான் உளவுத்துறை தீவிரவாதிகளை பயன்படுத்தி, இந்தியாவில் எப்படி மறைமுகமான தாக்குதலை நடத்துகிறது என்பதையும் எளிதாகவே தெரிவித்து விட்டான். அவனிடம் இருந்து உண்மையை பெற நாங்கள் கஷ்டமான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்றார் அவர். அதேநேரம், பாகிஸ்தானுக்கு தான் மிகவும் முக்கியமானவன், எப்படியும் என்னை அழைத்துச் செல்வார்கள் என்றும் மசூத் அசார் கூறினானாம். காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு, இந்த அளவுக்கு இருக்கும் என விவரம் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டேன், இனி இந்த பக்கம் தலை வைக்க மாட்டேன் என்றும் கூறினானாம்.
விமானம் கடத்தல்
இந்த நிலையில்தான், 1999ம் ஆண்டு நேபாளத்தில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது. ஆப்கனுக்கு அந்த விமானம் கொண்டு செல்லப்பட்டது. மசூத் அசாரை விடுவித்தால்தான், விமானத்தை விடுவிப்போம் என தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். எனவே, இந்திய அரசால் மசூத் அசார் விடுவிக்கப்பட்டான். 180 பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்பதால் அப்போதைய வாஜ்பாய் அரசால், மசூத் அசார் உட்பட 3 தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் செல்ல குழந்தை
பாகிஸ்தானுக்கு, மசூத் அசார் மிகவும் முக்கியமானவன் என்பதையே இந்த விமானக் கடத்தல் சம்பவம் உறுதி செய்தது. இப்போதும், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு, சீனாவின் ஆதரவோடு பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. ஆனால், மீண்டும், மசூத் அசார் இந்திய ராணுவத்திடம் சிக்கினால், சிதைத்துவிடுவார்கள் என்பது மட்டும் உறுதி.