குட்டி செமி பைனல்.. ராஜஸ்தான், ஹரியானாவில் 2 தொகுதிக்கு இடைத்தேர்தல்.. பரபர வாக்குப்பதிவு!
டெல்லி: ராஜஸ்தானில் உள்ள ராம்கார்க் மற்றும் ஹரியானாவில் உள்ள ஜிண்ட் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தல் பரபரப்பு இந்தியா முழுக்க பரவி இருக்கிறது. பல கட்சிகள் இந்த தேர்தலுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் அமைதியாக ஒரு இடைத்தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு 4 மாதங்களே உள்ள நிலையில் தற்போது இந்த இரண்டு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்து வருகிறது.
ஜிண்ட் தொகுதி
ஹரியானாவில் உள்ள ஜிண்ட் தொகுதி இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் எம்எல்ஏ ஹரி சந்த் மிதா மறைவிற்குபின் காலியானது. இந்த தொகுதிக்குத்தான் தற்போது தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் காங்கிரஸ், பாஜக, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே நான்கு முனை போட்டியாக நடக்கிறது. பாஜக ஆளும் மாநிலம் என்பதால் இது அதிகம் முக்கியத்துவம் பெறுகிறது.
முடிவு எப்போது
இந்த தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வரும் 31ம் தேதி அறிவிக்கப்படும். ஜிண்ட் தொகுதியில் மொத்தம் 1.72 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் 44 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இதனால் அவர்களின் வாக்கு இதில் முக்கிய முடிவுகளை எடுக்க வைக்கும்.
ராம்கார்க் தொகுதி
அதேபோல் ராஜஸ்தானில் உள்ள ராம்கார்க் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடந்து வருகிறது.அங்கு ஆட்சி செய்யும் காங்கிரஸ், இந்த தொகுதியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுடன் இந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. அங்கு பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால் தேர்தல் இங்கு மட்டும் தள்ளிவைக்கப்பட்டது.
விவரம்
பாஜக வேட்பாளர் லக்ஷ்மன் சிங் தேர்தல் சமயத்தில் மரணம் அடைந்துவிட்டதால் தேர்தல் நடக்காமல் தள்ளி வைக்கப்பட்டது. அங்கு தேர்தலுக்காக 278 பூத்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அங்கு 2 லட்சத்து 35625 வாக்காளர்கள் உள்ளனர்.இங்கும் தேர்தல் முடிவுகள் வரும் 31ம் தேதி அறிவிக்கப்படும்.
எத்தனை பதிவு
ஹரியானாவில் உள்ள ஜிண்ட் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இதுவரை 53% சதவிகித வாக்குகள் அங்கு பதிவாகி உள்ளது. ராஜஸ்தானில் உள்ள ராம்கார்க் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இதுவரை 56% சதவிகித வாக்குகள் அங்கு பதிவாகி உள்ளது.