புகை பிடிப்பவர்கள், வெஜ் பிரியர்கள், ஓ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு.. கொரோனா ஈஸியாக வராதாம்!
டெல்லி: மொத்தம் 3 வகையான நபர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக புதிதாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை வெளியான ஆய்வுகளில் இருந்து சற்று மாறுபட்ட ஒரு தகவலும் இந்த ஆய்வில் உள்ளது. ஆம்.. புகை பிடிப்பவர்கள் கொரோனாவிலிருந்து தப்பிக்க அதிக சான்ஸ் இருக்கிறது என்று சொல்கிறது இந்த ஆய்வு.
இதுதவிர வேறு 2 வகை நபர்கள் யார்? இதோ அந்த ஆய்விலுள்ள முக்கிய அம்சங்களை பாருங்கள்.
இந்தியாவில் ஆய்வு
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) நடத்திய இந்திய அளவிலான ஆய்வில்தான், இந்த தகவல் வெளியாகியுள்ளது. 10,427 நபர்களிடம் இந்த ஆய்வுகள் நடந்துள்ளன. இதில், 1,058 (10.14 சதவீதம்) பேர் கொரோனா வைரசுக்கு எதிராக நல்ல ஆன்டிபாடிகளை உடலில் வைத்துள்ளார்கள்.
மூன்று பிரிவினர்
ஆன்டிபாடிகள் அதிகம் இருப்போரில் அதிகம் பேர், ஓ குரூப் ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், மற்றும் சைவம் சாப்பிடுவோர் என்பதுதான் இதில் முக்கிய தகவலாகும். இந்த ஆய்வில் பங்கேற்ற, மூத்த விஞ்ஞானி சாந்தனு சென்குப்தா கூறினார்.
ஆச்சரிய தகவல்
"புகைபிடிப்பவர்கள் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருப்பதாக கண்டுபிடித்த இந்தியாவின் முதல் ஆய்வு இதுதான். கொரோனா ஒரு சுவாச நோயாக இருந்தபோதிலும், புகைபிடித்தல் பாதுகாப்பை வழங்குகிறது என்பது ஆச்சரிய தகவல்தான்" என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
புகை பிடித்தல்
பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் சீனாவில் நடத்தப்பட்ட சில ஆய்வுகளும், புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிக்க வாய்ப்பு குறைவு என்று கண்டுபிடித்தன. இந்த ஆய்வும் அதேபோல முடிவுகளைத்தான் காட்டுகிறது.
சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை
கடந்த ஆண்டு ஜூலை மாதம், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட எச்சரிக்கையில், புகைபிடிப்பவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. புகைபிடித்தல் கையிலிருந்து வாய்க்கு வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது, மேலும் புகையிலை பொருட்களின் பயன்பாடு சுவாச நோய்த்தொற்றுகளின் தீவிரத்தை அதிகரிக்கும் என்று, அரசு எச்சரித்திருந்தது.
பாதுகாப்பு
"பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை தவிர்த்து, பைக், கார்கள் போன் தனி போக்குவரத்தை பயன்படுத்துவது, வீட்டிலிருந்து வேலை பார்ப்பது, புகைபிடித்தல், சைவ உணவு மற்றும்" ஏ "அல்லது" ஓ " ரத்தம் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பி மற்றும் ஏபி ரத்த குரூப்பைச் சேர்ந்தவர்கள், கொரோனா விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்கிறது இந்த ஆய்வு.