ராகுல் காந்தி இப்படி பேசலாமா.. நடவடிக்கை எடுத்தேயாகனும்.. தேர்தல் ஆணையம் விரைந்த ஸ்மிருதி இரானி
டெல்லி: பலாத்கார பிரச்சினையை அரசியலாக்கியதால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
நாட்டில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தின் போது இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார் ராகுல் காந்தி. மேட் இன் இந்தியா என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கோஷம் என்ற போதிலும் இப்போது ரேப் இன் இந்தியா என்பது நாட்டின் நிலைமை ஆகிவிட்டது என்று தெரிவித்திருந்தார்.
இதனால் பாஜகவினர் கோபமடைந்தனர். லோக்சபாவில் இன்று பாஜக எம்பிக்கள் ராகுல் காந்தியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இருப்பினும் இந்த விவகாரத்தில் தாம் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று ராகுல்காந்தி நாடாளுமன்றத்தின் வெளியே நிருபர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். குடியுரிமை சட்ட மசோதா காரணமாக நாட்டில் எழுந்துள்ள கொந்தளிப்பு சூழ்நிலையில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு ஸ்மிருதி இரானி தலைமையிலான பாஜக குழு நேரில் சென்று ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி மனு ஒன்றை அளித்துள்ளது.
இதன்பிறகு ஸ்மிருதி இராணி நிருபர்களிடம் பேசும்போது, நாட்டில் முதல் முறையாக பலாத்கார சம்பவத்தை அரசியல் விவகாரத்துக்காக ஒரு கட்சித் தலைவர் கையில் எடுத்துள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக பலாத்கார சம்பவத்தை பயன்படுத்தக் கூடிய அரசியல் கட்சியினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அனைத்து ஆண்களுமே பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களை போல ராகுல்காந்தி பேசியுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் மக்களே முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் எங்களது புகாரை ஆய்வு செய்து எடுப்பதாக உறுதி அளித்துள்ளது. இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.