டேய் முட்டாள்.. இது என் பொண்ணுடா.. ரொம்ப பெருமையா சொல்றேன்.. ஸ்மிருதி இராணியின் உருக்கம்
Recommended Video
டெல்லி: இது என் பொண்ணு.. இவளைப் பெற்றதற்காக பெருமைப்படுகிறேன். இவளுடைய அம்மா என்பதற்காக பெருமைப்படுகிறேன் என்று உருக்கமாக பதிவு போட்டுள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி.
மத்தியஅமைச்சர் ஸ்மிருதி இராணி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர்தான்.. ஆனால் தான் ஒரு சராசரி பாசமுள்ள தாயார் என்பதை நேற்று நிரூபித்துள்ளார். அவர் போட்ட ஒரு பதிவு அத்தனை பேரின் அன்பையும் அவர் மீது திருப்பி விட்டுள்ளது.
தனது மகளுக்காக அவர் உருகியதைப் பார்த்து, இரும்புப் பெண்மணியாக வலம் வரும் இராணிக்குள் இத்தனை இளகிய மனமா, பாசமா, அன்பா என்று அனைவரும் நெகிழ்ந்து போயுள்ளனர்.
மனம் புண்பட்டது
ரொம்ப சாதாரண விஷயம்தான். ஆனால் ஒரு அம்மாவாக மனம் புண்பட்டுப் போய் விட்டார் ஸ்மிருதி. தனது மகளுடன் எடுத்த ஒரு செல்பியை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதுதான் அவருக்கும், அவரது மகளுக்கும் மன வேதனையை ஏற்படுத்தி விட்டது. அதாவது அந்த செல்பியைப் பார்த்த ஸ்மிருதியின் மகளின் கிளாஸ்மேட் பையன் ஒருவன் கேலி செய்துள்ளான் போல. அது ஸ்மிருதியின் மகளை வேதனைக்குட்படுத்தி விட்டது. அம்மாவிடம் சொல்லி அழுது விட்டாராம்.
முட்டாள்
மகளின் கண்ணீர் கண்டால் எந்த தாய்க்குத்தான் பொறுக்கும். ஸ்மிருதியும் குமுறி விட்டார் இன்ஸ்டாகிராமில். அவர் போட்ட உருக்கமான அந்தப் பதிவுதான் இது. " என் மகளுடன் நான் எடுத்த செல்பி படத்தை எடுத்து விட்டேன். காரணம், அவளது வகுப்பில் ஒரு முட்டாள் என் மகளை கேலி செய்துள்ளான். ஜா என்ற பெயருடைய அந்தப் பையன் எனது மகளின் தோற்றத்தை பற்றி தனது வகுப்புத் தோழர்களிடம் கூறி கிண்டலடித்துள்ளான்.
எடுத்துருங்க
இதனால் எனது மகளுக்கு பெரும் வருத்தமாகி விட்டது. என்னிடம் வந்து, ம்மா, தயவு செய்து அதை எடுத்துருங்க. என்னை கேலி செய்கிறார்கள் என்று கூறியதால் நான் எடுத்து விட்டேன். எனது மகளின் கண்ணீரைப் பார்க்க என்னால் முடியவில்லை. ஆனால் எடுத்த பிறகுதான் நான் ஒன்றை உணர்ந்தேன். அப்படிச் செய்தால், அந்த முட்டாள் செய்த கேலியை ஒப்புக் கொண்டது போலாகி விடுமே என்று.
வெண்கல பதக்கம்
மிஸ்டர் ஜா.. எனது மகள் ஒரு நல்ல விளையாட்டு வீராங்கணை, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர், கராத்தேவில் 2வது டான் பிளாக் கருப்பு பெல்ட் வாங்கியவர். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை 2 முறை பெற்றவர். எனது அன்பான மகள், அழகான மகளும் கூட. எப்படி வேண்டுமானாலும் அவளை கேலி பண்ணிக்கங்க.. அவள் அதை சமாளிப்பாள். அவள் ஜோயிஷ் இராணி, எனது பெருமைக்குரிய மகள். நான் அவளது பெருமைக்குரிய தாயார்" என்று உருகியுள்ளார் ஸ்மிருதி.
|
வரவேற்பு
தனது மகளுடன் எடுத்த படத்தை நீக்கிய பின்னர் இந்த போஸ்ட்டைப் போட்ட ஸ்மிருதி அதே படத்தை மீண்டும் போட்டுள்ளார். ஸ்மிருதியின் இந்த போஸ்ட் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 14,000க்கும் மேற்பட்ட லைக்குகளை வாங்கியுள்ளது. பலரும் ஸ்மிருதிக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
கேலி கிண்டல்
தம்பிகளா, உருவக் கேலி செய்யாதீங்கப்பா.. அது ஒரு மனதை மட்டுமல்ல.. ஒருவரது நம்பிக்கையையும் சேர்த்து சீர்குலைத்து விடும். உங்களது நட்பாக பாருங்கள், அன்பாகப் பாருங்கள். ஸ்மிருதி போன்றவர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், தனது மகளின் குணாதியத்தை வெளிப்படுத்தி அவருக்கு உற்ற தோள் கொடுத்து பதிவிட்டிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. சபாஷ் ஸ்மிருதி!