சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கில் திருப்பம்.. தீர்ப்பை ஒத்திவையுங்கள்.. முக்கிய சாட்சி பரபர மனு
டெல்லி: சொராபுதீன் ஷேக் வழக்கில், சிபிஐ தரப்பின் முக்கிய சாட்சியமான ஆசம் கான் சார்பில் அவரது மனைவி, மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி, தீர்ப்பு வெளியிடுவதை தள்ளி வைக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் அருகே, அம்மாநில போலீசாரால் சோராபுதீன் ஷேக் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
சில தினங்களில் அவரது மனைவி கவுசர் பீ பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சொராபுதீன் ஷேக் கூட்டாளி மற்றும் இந்த என்கவுண்டர் வழக்கில் நேரடி சாட்சியமாக துளசிராம் பிரஜாபதி அடுத்த ஆண்டில், போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அமித்ஷா தப்பினார்
குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அமித் ஷா உள்ளிட்ட சிலர் 2014ஆம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை மும்பையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
டிசம்பர் 21ல் தீர்ப்பு
2 வாரங்கள் முன்பு சிபிஐ தரப்பு தனது இறுதி வாதத்தை எடுத்து வைத்தது. பல சாட்சிகள் பிறழ் சாட்சியங்களாக மாறியபோதிலும் அதை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் ஏற்கனவே கொடுத்த சாட்சியத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், நடைபெற்றது போலி என்கவுண்டர் தான் என்றும் சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் தரப்பில் இந்த வழக்கின் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று வாதம் வைக்கப்பட்டது. இந்த பரபரப்பான வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 21ஆம் தேதி வழங்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முக்கிய சாட்சி
இந்த நிலையில், சொராபுதீன் ஷேக்கின் கூட்டாளி ஆசம் கான் என்பவரின் மனைவி ரிஸ்வானா, ஆசம் கான் சார்பில், மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இந்த வழக்கின், தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரியுள்ளார். சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் 500 பேருக்கும் மேல் பெயரை சேர்த்த நிலையில், 210 பேரின் சாட்சியங்கள்தான் பெறப்படடது. அதிலும் 92 பேர் பிறழ்சாட்சியங்களாக மாறினர்.
கொடுமை
இதை சுட்டிக்காட்டியுள்ள ரிஸ்வானா, அனைத்து சாட்சியங்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்ட பிறகுதான், தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், அதுவரை தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். தனது கணவர் ஆசம் கான் இந்த வழக்கில் தன்னைப்போலவே ஒரு சாட்சி என்பதை சுட்டிக்காட்டியுள்ள ரிஸ்வானா, தங்களது குடும்பத்தை போலீசார் மிரட்டியதாகவும், கொடுமைப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
அதிகாரிகள்
என்கவுண்டர் வழக்கில் தொடர்புள்ள ராஜஸ்தானை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் பெயரை சாட்சியம் சொல்ல கூடாது என மிரட்டப்பட்டோம். இன்ஸ்பெக்டர் அப்துல் ரகுமான், போலீஸ் அதிகாரிகள் ஹரேந்திர சிங் சோடா, துணை எஸ்.பி, பகவத் சிங் ஹிங்காட் மற்றும் கான்ஸ்டபிள் சலிம் ஆகியோர் எங்களை கொடுமைப்படுத்தினர்.
வாக்குமூலம் திரிப்பு
சிபிஐயிடம் எனது கணவர் கொடுத்த வாக்குமூலத்தில், போலி என்கவுண்டர் தொடர்பாக நிறைய அதிகாரிகள் பெயரை கூறியிருந்தார். ஆனால், நீதிமன்றத்தில் அந்த வாக்குமூலத்தை தாக்கல் செய்தபோது பல பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. அதை அப்போது ஆசம் கானால் மறுக்க முடியவில்லை. எனவே, அவரது வாக்குமூலத்தை நீதிமன்றம் மீண்டும் பெற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாராக உள்ளார்
ஆசம் கான் தற்போது ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் சிறையில் உள்ளார். அவரை, 20 நாட்களாக சிறையில் கொடுமைப்படுத்திய பிறகே, மிரட்டி நீதிமன்றம் அழைத்து வந்து போலீசார் ஆஜர்படுத்தியதாகவும், இப்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, நீதிமன்றத்தில், முழு தகவலையும் சொல்ல அவர் தயாராக இருப்பதாகவும், அவரை மனு தாக்கல் செய்ய அனுமதிக்காததால், மனைவி என்ற முறையில் தான் இந்த மனுவை தாக்கல் செய்வதாக ரிஸ்வானா கூறியுள்ளார்.
இந்த மனு அடுத்த வாரம் உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட உள்ளது.