ஒரே நாள் வீட்டிலிருந்தால் கொரோனா வைரஸ் போகாது.. ரஜினிக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கு பின்பற்றவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்று இந்தியாவில் ஏறத்தாழ அனைத்து பகுதிகளிலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் மோடியின் இந்த அழைப்பு எதற்காக என்ற பெயரில் அவரவர் தங்கள் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
அதாவது.. ஒரு நாள் முழுக்க இந்த வைரஸ் இன்னொருவரிடம் பரவாமல் இருந்தால், அதன் பிறகு பரவாது எனவேதான் மோடி அழைப்பு விடுத்துள்ளார் என்று பலரும் சமூக ஊடகங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
நேற்று நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவிலும், இந்த வைரசின் ஆயுள் காலம் 14 மணிநேரம் என்பது போல ஒரு கருத்தை தெரிவித்து சிக்கலில் சிக்கி இருந்தார். இப்படியாக, பிரபலங்களே தவறான கருத்துக்களை கூறுவதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.
இன்று இரவு 9 மணிக்கு மேல் எல்லோரும் முன்பு போல கூட்டம் கூட்டமாக வெளியே கிளம்பி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். இந்த நிலையில்தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
Some anti-social elements are spreading misinformation that after today’s #JantaCurfew ends,the deadly virus will be wished away.
— Dr Harsh Vardhan (@drharshvardhan) March 22, 2020
They’re exhorting people to come outdoors after 9pm.
This is false & an attempt to mislead the public.#SocialDistancing must be adopted as a habit.
ட்விட்டர் பதிவில் அவர் கூறும்போது: சில சமூக விரோதிகள் தவறான ஒரு கருத்தை பரப்பி வருகிறார்கள். இன்றைய ஊரடங்கு உத்தரவு முடிவுற்றதும் வைரஸ் மாயமாகிவிடும் என்பது போல அவர்கள் கருத்துக்களை கூறுகிறார்கள். இதன் மூலம் இரவு 9 மணிக்கு பிறகு மக்கள் வெளியே வருமாறு அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது தவறானது & பொது மக்களை தவறாக வழி நடத்த முயற்சி. சமூக விலகல் என்பது ஒரு வழக்கமாக மாற வேண்டுமே தவிர ஒரு நாளில் சரி செய்யக் கூடிய விஷயமல்ல, என்று ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ பேட்டிக்கு, தக்க பதிலை மத்திய அமைச்சர் கொடுத்துள்ளார் சமூக வலைத்தளங்களில் இதை ஷேர் செய்துள்ளனர் நெட்டிசன்கள். ரஜினிகாந்திற்கு இது தக்க பதிலடி என்று நெட்டிசன்கள், கூறி வருவதை பார்க்க முடிகிறது.
கொரோனா பரவுவதை தடுக்க.. நாடு முழுக்க மார்ச் 25 வரை ரயில் சேவை ரத்து.. அதிரடி முடிவு
எனவே மக்களே யாரும் அவசரப்பட்டு நீங்கள் கடைபிடித்து வரக்கூடிய சமூக விலகல் என்பதை விட்டு விடாதீர்கள். அரசு கூறும் வரை தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும். வீடுகளுக்குள்ளேயே அனைவரும் இருந்து கொள்வது நல்லது. இப்படித்தான் சீனா படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதை மக்கள் உணர வேண்டியது அவசியம்.