‛காமெடியன்’.. ராகுல்காந்தியை விளாசிய சிடி ரவி.. இந்தியாவை இலங்கையோடு ஒப்பிட்டதால் வெடித்தது மோதல்
டெல்லி: வேலையின்மை, பெட்ரோல் விலை, மதக்கலவரம் ஆகியவற்றை ஒப்பிட்டு இந்தியாவும் இலங்கையை போல் தான் உள்ளது என ராகுல்காந்தி விமர்சனம் செய்த நிலையில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, அவரை ‛காமெடியன்' என விமர்சனம் செய்துள்ளார்.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் உணவு, எரிபொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்து விண்ணை தொட்டுள்ளது.
அங்கு ஆட்சி செய்த ராஜபக்சே சகோதரர்களின் தவறான பொருளாதார கொள்கையே இத்தகைய நிலைக்கு காரணம் என பொதுமக்கள், பொருளாதார நிபுணர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், இலங்கையில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையின் இத்தகைய சூழலுக்கு உள்நாட்டு கலவரம், மதம், இனபாகுபாடு ஆகியவையும் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ள நிலையில் அதிபர் பதவியில் கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து வருகிறார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றாலும் மக்கள் போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டே உள்ளது. இதனால் அங்கு நெருக்கடி நிலை நிலவுகிறது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி பாதையாத்திரை...அக்.2ல் தொடங்கும் சோனியா அறிவிப்பு
இலங்கையுடன் இந்தியா ஒப்பீடு
இந்நிலையில் தான் இலங்கையை இந்தியாவுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக மத்திய அரசை தாக்குகின்றன. சமீபத்தில் தலைநகர் டெல்லி, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்பட பல மாநிலங்களில் இருதரப்பினரிடையே நடந்த மதம்சார்ந்த மோதல், உயர்ந்து வரும் கியாஸ் சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலையின் விலையேற்றம், பணவீக்கம் உள்ளிட்டவற்றை காரணமாக கூறி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை எதிர்க்கட்சிகள் தாக்கி பேசி வருகின்றன.
ராகுல்காந்தி விமர்சனம்
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி புள்ளிவிபரங்களோடு மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். நேற்று ராகுல்காந்தி இந்தியாவையும், இலங்கையும் ஒப்பிட்டு டுவிட்டர் பதிவு செய்து விமர்சனம் செய்துள்ளார். அதில் வேலையின்மை, பெட்ரோல் விலை, மதகலவரங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு கிராப் ஒன்றை இந்தியா, இலங்கைக்கு தனித்தனியே வெளியிட்டுள்ளார். இந்த கிராப்பானது 2007 ம் ஆண்டு முதல் இந்தியா-இலங்கை இடையே ஒத்துபோவதாக அவர் தெரிவித்துள்ளார். அதோடு மக்களை திசைதிருப்புவதன் மூலம் உண்மைகளை மாற்ற முடியாது. இந்தியாவும், இலங்கை போன்று தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.
காமெடியன் என பாஜக விமர்சனம்
ராகுல்காந்தியின் இந்த பதிவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சிடிரவி ராகுல்காந்திக்கு பதிலடி கொடுத்து விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛2027 ம் ஆண்டில் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட உள்ளது. ஆனால் சில காமெடியன் இந்தியாவை இலங்கையுடன் ஒப்பிட்டுள்ளனர். ராகுல்காந்தி நீங்கள் வளர்ந்து வரும் நேரம் இது இல்லையா? '' என குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் கருத்து மோதல்கள்
சிடிரவியின் இந்த பதிவுக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகள் தெரிவித்துள்ளனர். மேலும் காமெடியன் என கூறியுள்ளதை பலர் கண்டித்துள்ளதோடு,, இந்தியாவின் பணவீக்கம் தொடர்பான கேள்விகளை எழுப்பி பதில் கூறும்படி வலியுறுத்தி வருகின்றனர். இதனால் சமூக வலைதளத்தில் இதுதொடர்பான கருத்து மோதல்கள் தொடர்கிறது.