ராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு
டெல்லி: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பிய மாஜி துணை முதல்வர் சச்சின் பைலட் கோரிக்கைகளை ஆராய 3 பேர் கொண்ட குழுவை அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் ராஜஸ்தான் நிலவரம் தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட்டுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
ராஜஸ்தானில் தமக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். அவருக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்களும் அணிதிரண்டனர்.
சச்சினின் 3 கோரிக்கைகள்...ராகுலுடன் சந்திப்பு...முடிவுக்கு வருகிறது ராஜஸ்தான் சிக்கல்!!
சச்சிம் கலக குரல்
இதனால் ராஜஸ்தானில் முதல்வர் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அத்துடன் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையை சபாநாயர் ஜோஷி மேற்கொண்டார். இன்னொரு பக்கம் ஆட்சிய கவிழ்க்க சதி செய்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 பேர் மீது வழக்கும் பாய்ந்தது.
ராகுல் காந்தியுடன் ஆலோசனை
இதனிடையே சச்சின் பைலட், பாஜகவுக்கு தாவுகிறார் எனவும் செய்திகள் வெளியாகின. ஆனால் பாஜகவில் சச்சின் பைலட் சேரவில்லை. இந்த நிலையில் ராஜஸ்தான் அரசியலில் புதிய திருப்பமாக டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சச்சின் பைலட் நேரில் சந்தித்து தமது பிரச்சனைகள் குறித்து விவரித்தார்.
பைலட் கோரிக்கைக்காக குழு
தம்மையே அடுத்த முதல்வர் வேட்பாளர் என அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை சச்சின் பைலட் காங்கிரஸ் மேலிடத்தில் வைத்திருந்தார். இந்நிலையில்தான் பைலட்டின் கோரிக்கைகளை ஆராய்வதற்காக 3 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் மேலிடம் நியமித்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியா திடீர் ஆலோசனை
அத்துடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 2 பேர் கெலாட்டை சந்தித்தும் பேசினர். இதனால் ராஜஸ்தான் அரசியலில் நீடித்து வந்த பஞ்சாயத்து ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது எனலாம்.
சச்சின் ஏற்பு
இதனிடையே டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சச்சின் பைலட் திங்கள்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், சோனியா காந்தி அமைத்த 3 பேர் குழுவை ஏற்கிறோம். கொள்கை ரீதியாகத்தான் சில பிரச்சனைகளை கட்சியின் நலன் கருதி எழுப்பினோம். அனேகமாக அனைத்து பிரச்சனைகளும் விரைவில் சரியாகிவிடும் என நினைக்கிறே என்றார்.
யார் யார் மூவர் குழு
சச்சின் பைலட் விவகாரம் தொடர்பாக சோனியா காந்தி அமைத்த மூவர் குழுவில் பிரியங்கா காந்தி, அகமது பட்டேல், கேசி வேணுகோபால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினருடன் சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் டெல்லியில் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது தங்களுக்கான பிரச்சனைகள் என்ன என்பது குறித்து சோனியாவின் இந்த மூவர் குழுவிடமும் விரிவாக எடுத்துரைத்தனர்.