"சிங்கம்" களம் இறங்கிருச்சு.. மீண்டும் சோனியா.. ஜிவ் உற்சாகத்தில் காங்கிரஸ்!
டெல்லி: நீண்ட காலமாக தீவிர அரசியல் பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீண்டும் களம் குதித்துள்ளார்.
ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்கிய பின்னர் தீவிர அரசியலில் தலையிடாமல் இருந்து வருகிறார் சோனியா காந்தி. நாடாளுமன்றத்திற்கு வருவார், அதேசமயம், விவாதங்களில் பெரிய அளவில் கலந்து கொள்ள மாட்டார்.
அதேபோல பொது நிகழ்ச்சிகளிலும் கூட அதிகமாக கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். உடல் நிலை ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும் கூட, ராகுல் காந்தியை முழுமையாக சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும் வகையில் தன்னை சுருக்கிக் கொண்டார் சோனியா காந்தி.
மே 23 எதிர்க்கட்சிகள் கூட்டம்
இந்த நிலையில் தற்போது முக்கியமான கட்டத்தில் நாடு உள்ளது, காங்கிரஸ் உள்ளது, அதை விட முக்கிமயாக ராகுல் காந்தி மிக முக்கியமான தருணத்தில் உள்ளார். கைக்கு எட்டும் தூரத்தில் அதி முக்கியப் பதவி காத்திருக்கிறது. ஆனால் அதை அவர் தொட முடியாமல் தடுக்க பாஜக படு மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் மே 23ம் தேதி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
ஒரு கட்சி விடாமல்
இந்தக் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியுள்ளதற்கு முக்கியக் காரணமே, ஒரு கட்சி கூட தெரிந்தோ தெரியாமலோ பாஜக பக்கம் போய் விடக் கூடாது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவே. எனவேதான் ஒவ்வொரு நகர்வையும் பார்த்துப் பார்த்து செய்ய சோனியா காந்தியே நேரடியாக களம் குதித்து விட்டார்.
நேரடிப் பார்வையில்
சோனியா காந்தியின் நேரடிப் பார்வையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. எல்லா ஏற்பாடுகளையும் சோனியா காந்தியே நேரடியாக பார்த்து வருகிறாராம். யார் யார் வர வேண்டும், யாரையெல்லாம் கூப்பிட வேண்டும் என்பது முதல் அனைவருக்கும் தனது கைப்பட கடிதம் எழுதுவது என எல்லாவற்றையும் சோனியாவே நேரடியாக பார்த்து வருகிறாராம்.
ஆர்வம்
காங்கிரஸ் கூட்டணிக்கும், காங்கிரஸுக்கு நெருக்கமான பிராந்திய கட்சிகள் பலவற்றுக்கும் இந்தத் தேர்தலில் நல்ல வாய்ப்புகள் கூடி வருவதாக நம்பும் சோனியா காந்தி, அந்த வாய்ப்பை பாஜகவிடம் இழந்து விடாமல் தடுக்கவே நேரடியாக களம் இறங்கியுள்ளார். மே 23ம் தேதி கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இடம் பெறாத பல்வேறு கட்சிகளையும் கலந்து கொள்ளச் செய்வதில் அவர் ஆர்வமாக உள்ளாராம்.
விட்டு விடக் கூடாது
எந்த வாய்ப்பையும் தவற விட்டு விடக் கூடாது. யாரும் முகம் சுளித்து விடக் கூடாது. ஒற்றுமை பிளவுபட்டு விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் சோனியா, ஜூனியரான ராகுலை விட மூத்தவரான தாமே களம் இறங்கினால்தான் சரியாக இருக்கும், கட்சித் தலைவர்களும் எளிமையாக அணுக முன்வருவார்கள் என்று கணக்கிட்டு நேரடியாக அவரே ஈடுபட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
பார்முலா பழசுதான்
சோனியா காந்தி ஏற்கனவே கூட்டணி அரசியலை கையாளுவதில் திறமையானவர். இவரது சிறப்பான வியூகங்கள் காரணமாகத்தான் மன்மோகன் சிங் தலைமையில் 2 முறை காங்கிரஸ் கட்சியால் கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்த முடிந்தது என்பது நினைவிருக்கலாம். எனவே பழைய பார்முலாவை கொஞ்சம் தூசு தட்டி கையில் எடுத்து களம் இறங்கியுள்ள சோனியா இதிலும் நிச்சயம் வெற்றி பெறுவார் என காங்கிரஸார் நம்புகின்றனர்.