கொரோனா லாக்டவுன்: மே 22-ல் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு சோனியா அழைப்பு
டெல்லி: கொரோனா லாக்டவுன் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா பரவுவதைத் தடுக்க 4-ம் கட்ட லாக்டவுன் அமலில் உள்ளது. லாக்டவுனால் ஒட்டுமொத்த இந்திய பொருளாதரம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது.
இதனை சமாளிக்க மத்திய அரசு ரூ20 லட்சம் கோடி பொருளாதார திட்டங்களை அறிவித்தது. இது தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்திருந்தார். அத்துடன் நாட்டின் பொத்த்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது குறித்த அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார்.
இதனிடையே லாக்டவுன் காலத்தில் பெருந்துயரமாக இடம்பெயர் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இடம்பெயர் தொழிலாளர்களின் துயரங்கள் நாட்டை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த நிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூட்டியுள்ளார்.
"நான் இருக்கிறேன்".. இடம்பெயர் தொழிலாளர்களுக்காக.. தெருவில் இறங்கிய ராகுல்.. அப்படியே ராஜீவ் போல!
மே 22-ந் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிபிஎம் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பது குறித்து சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் எந்த ஒரு முடிவையும் அறிவிக்கவில்லை.