'ஒரே விலையை நிர்ணயிக்க முடியாதா..?' - மத்திய அரசை போட்டுத் தாக்கிய சோனியா, மம்தா
டெல்லி: மத்திய அரசின் புதிய கோவிட்-19 தடுப்பூசி கொள்கை தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒருபக்கம், இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மறுபக்கம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கப்பட்ட நிலையில், மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
"டேஞ்சர்".. 3 முறை உருமாறிய "பெங்கால் வைரஸ்".. பீதியை கிளப்பும் கொரோனா 2வது அலை..!
ஆன்லைன் பதிவு
இதையடுத்து கோவிஷீல்ட் தடுப்பூசியானது மாநில அரசுகளுக்கு ரூ.400, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்ற விலையிலும் விற்கப்படும் என்று சீரம் இந்தியா நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் ஏப்ரல் 24 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கவுள்ளதாக மத்திய அரசு இன்று அறிக்கை வெளியிட்டது.
சோனியா கேள்வி
இந்த சூழலில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள 2 பக்க கடிதத்தில், "18 முதல் 45 வயதுக்குட்பட்ட குடிமக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்குவதற்கான பொறுப்பை இந்திய அரசு கைவிட்டுள்ளது. இது நமது நாட்டின் இளைஞர்கள் மீது அரசாங்கத்தின் பொறுப்பு முற்றிலுமாக காணாமல் போயிருப்பதை காட்டுகிறது. நாட்டில் அனைவருக்கும் ஒரேமாதிரியான தடுப்பூசி விலையை நிர்ணயிக்க வேண்டும்.
கொஞ்சம் கூட பாடம் படிக்கலையா?
இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு உடனடியாக முடிவை மாற்ற உத்தரவிட வேண்டும். கடந்த ஆண்டு கொரோனா அளித்த மோசமான அனுபவம், மக்களுக்கு ஏற்பட்ட வலி, வேதனை ஆகியவற்றில் இருந்து மத்திய அரசு கொஞ்சம் கூட பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் புதிய கோவிட் கொள்கையானது தன்னிச்சையாகவும், பாரபட்சமாகவும் உள்ளது. இது தற்போதைய நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில் தான் அமைந்திருக்கிறது.
ஒரே விலை தேவை
இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தனது ட்வீட்டில், "ஒவ்வொரு இந்தியருக்கும் வயது, சாதி, மதம், இருப்பிடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இலவச தடுப்பூசி தேவை. கோவிட் தடுப்பூசிக்கு இந்திய அரசு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும். ஒரே தேசம், ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று எப்போதும் கூச்சலிடுபவர்கள், உயிரைக் காப்பாற்றும் தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்க மறுக்கிறார்கள்" என்று போட்டுத் தாக்கியுள்ளார்.