நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா.. சோனியா காந்தி- ராகுல் காந்தி பங்கேற்பு
டெல்லி: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள்.
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றுள்ளது. பாஜக மட்டுமே 303 இடங்களில் வென்று தனிப்பெருன்மை பலத்துடன் ஆட்சியமைக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி கடந்த சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து பழைய அமைச்சரவையை கலைத்து, தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு குடியரசுத் தலைவரிடம் மோடி கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் மோடியை பிரதமராக பதவியேற்குமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக நடந்து வருகிறது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் விழாவில் பல வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இத்துடன் இந்தியா முழுவதும் பல்வேற மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அவர்கள் இருவரும் விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 6500 விஐபிக்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளார்கள். இதனால் டெல்லி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.