தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து
டெல்லி: காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் சோனியாக காந்தி பங்கேற்பதாக இருந்த முதல் பேரணி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவின் மகேந்தர்கார்க்கில் இன்று நடைபெற உள்ள அந்த பேரணியில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் வந்தால் 73 வயதை கடக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால் அந்த பொறுப்பை தற்காலிகமாக வகித்து வருகிறார்.
சோனியா காந்தி உடல் நிலைக்காரணமாக பொதுவாகவே எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் பங்கற்பது அபூர்வமான விஷயம் ஆகும். அவர் கடைசியாக ரேபரலில் கடந்த ஜூன் 12ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தன்னை எம்பியாக தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார்..
மகாராஷ்டிரா தேர்தல்
ஆனால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா காந்தி ஈடுபடவில்லை. தற்போது ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு வாக்கு எண்ணிக்கை 24ம் தேதி நடைபெற உள்ளது.
பிரச்சாரம்
இதையொட்டி ராகுல் காந்தி மட்டுமே இரு மாநிலங்களிலும் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஹரியானா மாநிலத்தின் மகேந்தர்கார்க்கில் இன்று பிற்பகல் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூடத்தில் சோனியா காந்தி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ராகுல் பங்கேற்பு
இந்நிலையில் திடீரென தவிர்க்க முடியாத காரணத்தால் சோனியா காந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் ராகுல் காந்தி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா பங்கேற்கவில்லை
காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற சோனியா காந்தி முதல்முறையாக பேரணியில் பங்கேற்பார் என் எதிர்பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாற்றும் ஹரியானாவில் பாஜக ஆளும் கட்சியாகவும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவும் தற்போது உள்ளன. காங்கிரஸ் கட்சி இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.