கொடூரமான நகைச்சுவை.. எங்கே பிளான்.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆவேசமான சோனியா காந்தி
டெல்லி: அதிகார மையம் முழுக்க பிரதமர் அலுவலகத்திலேயே குவிந்து இருக்கிறது என்றும், அடுத்த கட்டமாக என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மத்திய அரசுக்கு தெரியாமல் இருக்கிறது என்றும், அரசு கடுமையாக சாடியுள்ளார் காங்கிரஸ் கட்சியின், இடைக்கால, தலைவர் சோனியா காந்தி.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு சோனியா காந்தி இன்று அழைப்பு விடுத்திருந்தார். இதில் திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, இடதுசாரிகள் உட்பட 22 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தைப் பொறுத்தளவில், திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்ற முக்கிய தலைவர்கள் ஆகும்.
வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சோனியா காந்தி முன்வைத்தார். நாட்டு மக்கள் சந்தித்துவரும் பிரச்சனைக்கு, மத்திய அரசிடம் தீர்வு எதுவுமே இல்லாததை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது. ஏழைகள் மீது அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதை நினைக்கும்போது மனது வருந்துகிறது.
என்னால் முடியவில்லை.. விமானம் விழுவதற்கு முன் பைலட் அனுப்பிய மெசேஜ்.. பாக். விபத்தின் பகீர் பின்னணி
21 நாட்கள் என நினைத்த பிரதமர்
21 நாட்களில் வைரசுக்கு எதிரான இந்தப் போர் முடிவுக்கு வந்துவிடும் என்று பிரதமர் நினைத்தார். ஆனால் அது தவறான கணக்கு என்பது பிறகுதான் தெரிந்தது. தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை இந்த வைரஸ் அப்படியேதான் இருக்கப்போகிறது. இந்த அரசுக்கு லாக் டவுன் நடைமுறைப்படுத்துவதில் எந்த ஒரு யோசனையும் இல்லை. அதை முடித்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதிலும் எந்த ஒரு பிளானும் கிடையாது.
திரும்பி போன கருவி
லாக்டவுன் காலகட்டத்தில் மத்திய அரசு எடுத்த எந்த ஒரு நடவடிக்கையும் பலனளிக்கவில்லை. வேகமாக பரிசோதனை நடத்த வேண்டிய அந்த காலகட்டத்தில், மோசமான பரிசோதனை கருவிகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து விட்டு, பிறகு அதை பயன்படுத்த முடியாமல் திருப்பி அனுப்பியது இந்த அரசு.
கொடூர நகைச்சுவை
மக்கள் கஷ்டப்படும் நிலையில் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக பிரதமர் கூறினார். இந்த அறிவிப்பு என்பது இந்த நாட்டின் மீது நடத்தப்பட்ட மிக கொடூரமான நகைச்சுவை (Cruel Joke). குழந்தைகள், முதியோர் என பல ஆயிரம் கிலோமீட்டர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். நிலமற்ற ஏழை விவசாயிகள், விவசாயக் கூலிகள், என 13 கோடி குடும்பத்தினர் உணவுக்கு வழியின்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் மத்திய அரசு கொடூரமான முறையில் புறக்கணித்து விட்டது. மொத்தம் 6.3 கோடி சிறு குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதில் 5.8 கோடி நிறுவனங்களுக்கு அரசு சார்பில் எந்த ஒரு உதவியும் இதுவரை சென்று சேரவில்லை.
நேரடி பணம்
நம்மை போன்ற ஒத்தகருத்துடைய கட்சியின் தலைவர்கள், அரசின் பணம் என்பது நேரடியாக ஏழைகளின் கைகளுக்குச் சென்று சேர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இலவச உணவு தானியங்கள் அனைத்து குடும்பங்களுக்கும் நேரடியாக வினியோகிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். புலம்பெயர் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால் நமது கோரிக்கைகள் அனைத்துமே காது கேளாதவர் விழுந்த சொல் போன்ற நிலைமைக்கு போய்விட்டது.
|
தனியார் மயம்
இந்த பிரச்சனைகளை சரி செய்யாமல் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தூக்கி கொடுப்பதில்தான் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. நமது அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள, கூட்டாட்சி தத்துவம் கேள்விக்குறியாகியுள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளும் மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழுகளுடனும் எந்த ஒரு ஆலோசனையையும் அரசு மேற்கொள்வது கிடையாது. மொத்த அதிகாரமும் பிரதமர் அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.