காங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்!
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள சோனியா காந்தி தீவிரம்காட்டி வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தல் படுதோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அவர் தமது ராஜினாமாவை திரும்பப் பெற மறுத்ததால் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்றார்.
தற்போது காங்கிரஸ் கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ள படுதீவிரமாக நடவடிக்கைகளை சோனியா மேற்கொண்டு வருகிறாராம். அண்மையில் ஹரியானா காங்கிரஸ் தலைவராக குமாரி செல்ஜா நியமிக்கப்பட்டார்.
அப்பதவியில் இருந்த அசோக் தன்வாரை நீக்கியதற்கு முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்குவேன் எனவும் மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து ஹரியானா சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஹூடா அறிவிக்கப்பட பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது.
இதேபோல் மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் மும்பை காங்கிரஸ் தலைவர் பதவியை மிலிந்த் தியோரா ராஜினாமா செய்தார். அவருக்குப் பதில் புதிய தலைவராக ஏக்நாத் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். தற்போது மிலிந்த் தியோராவுக்கு தேசிய அளவில் முக்கிய பதவி அளிக்க திட்டமிட்டப்பட்டுள்ளதாம்.
பஞ்சாபில் லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்னர் சுனில் ஜாகர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரது பதவி விலகலை காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லை. அம்மாநில முதல்வர் அம்ரீந்தர்சிங், சுனில் ஜாகரே பதவியில் நீடிக்க வேண்டும் என விரும்புகிறாராம்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராமேஸ்வர் ஓரானை மாநில தலைவராக நியமித்து அம்மாநில காங்கிரஸ் கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது மத்திய பிரதேசம், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கான புதிய தலைவர்களை நியமிப்பதில் தீவிரம் காட்டுகிறாராம் சோனியா காந்தி.
இது தொடர்பாக தமக்கு விசுவாசமான மூத்த தலைவர்களின் ஆலோசனைகளைப் பெற்று வருகிறராம் சோனியாகாந்தி.