காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா நீடிப்பார்.. இன்னும் 6 மாதத்தில் புதிய தலைவர்.. பரபரப்பு முடிவு!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தேசிய தலைவராக சோனியா காந்தி இன்னும் 6 மாதங்கள் நீடிப்பார் என்று இன்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் திருப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சோனியாவே காங்கிரஸ் இடைக்கால தலைவராக நீடிப்பார் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பெரும் பரபரப்பிற்கு இடையே இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று கூட்டம் நடந்தது.
காங்கிரஸ் தலைமை சரியாக செயல்படவில்லை, துடிப்பான, களத்தில் இறங்கி செயலாற்ற கூடிய தலைவர் தேவை என்று இந்த 23 பேரும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து இன்று அவசர அவசரமாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது.
"ஜெயிக்கிறமோ இல்லையோ.. சண்ட செய்யனும்.." காங்கிரஸ் தலைமை உணருமா?
கூட்டம் நடந்தது
வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடந்தது. ராகுல் காந்தியும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் இரண்டு தரப்பாக பிரிந்து விவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அதாவது சோனியா, ராகுலுக்கு ஆதரவான நிர்வாகிகள், 23 மூத்த நிர்வாகிகளுக்கு ஆதரவான நிர்வாகிகள் என்று இரண்டு தரப்பாக கடுமையான விவாதம் நடந்தது.
சோனியா என்ன சொன்னார்
இந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி தனக்கு தலைவர் பதவி வேண்டாம் என்று கூறியதாக தகவல் வெளியானது. எனக்கு காங்கிரஸ் தலைவராக நீடிக்கும் விருப்பம் இல்லை. காரிய கமிட்டி கூடி , தலைவரை தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார். ராகுல் காந்தியும் தலைவர் பதவி எனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இதனால் நேரு குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராக வேண்டும், என்று காங்கிரசுக்குள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் என்ன
ஆனால் காங்கிரஸ் கட்சியின் வேறு சில மூத்த நிர்வாகிகள், மாநில தலைவர்கள் சோனியாவிற்கும் ராகுலுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நேரு குடும்பம் இல்லாமல் காங்கிரஸ் இல்லை. இவர்கள் பதவி விலகினால் அது மேலும் காங்கிரஸ் கட்சியின் வலிமையை குறைக்கும். அது மேலும் பாஜகவிற்கு சாதகமாக முடியும். அதனால் சோனியா காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் என்று சில மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
என்ன முடிவு
இந்த மீட்டிங் மொத்தம் 7 மணி நேரம் நடந்தது. இதில் தலைவர் பதவி வேண்டாம் என்பதில் சோனியா மிகவும் உறுதியாக இருந்துள்ளார். ஆனால் மூத்த தலைவர்களின் கோரிக்கையை அடுத்து, சோனியா காந்தி இன்னும் சில மாதங்கள் தலைவராக நீடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். அடுத்த தலைவரை தேர்வு செய்யும் வரை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தேசிய தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
6 மாதம் மட்டுமே
அடுத்த 6 மாதத்திற்குள் புதிய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய வேண்டும், என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கோரிக்கை வைத்து இருக்கிறார். அதுவரை மட்டுமே தலைவராக நீடிப்பேன். இதனால் காங்கிரஸ் காரிய கமிட்டி விரைந்து புதிய தலைவரை தேர்வு செய்ய பணிகளை தொடங்க வேண்டும் என்று சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.