பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு.. பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் சோனியா காந்தி
டெல்லி: நாட்டில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள், டெல்லியில் நடந்த பயங்கர தீவிபத்து போன்ற காரணங்களால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை (திங்கள்கிழமை) தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.
காங்கிரஸ் இடைக்கால தலைவரான சோனியா காந்தியின் 73 வது பிறந்த நாள் டிசம்பர் 9 தேதியாகும். ஒவ்வொரு வருடமும் சோனியா காந்தியின் பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடுவர்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார், அதன்பிறகு உ.பி.யின் உன்னாவோவில் பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிய மற்றொரு பெண் எரித்து கொல்லப்பட்டார். இப்படி நாட்டில் பெண்ககளுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்களால் சோனியா காந்தி வேதனை அடைந்துள்ளாராம்.
கொண்டாட்டமில்லை
இதனிடையே இன்று அதிகாலை டெல்லியில் நடந்த பயங்கர தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தாலும் மிகவும் வேதனை அடைந்தாராம். இது போன்ற காரணங்களால் நாளை தனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்ற முடிவுக்கு சோனியா காந்தி வந்துள்ளாராம்.
இடைக்கால தலைவர்
சோனியா காந்தி 1998 ல் காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவியேற்று, 2017 ல் தனது மகன் ராகுல் காந்திக்காக பதவி விலகினார். சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால் 2014ல் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் ராகுல் காந்தி 2019 லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகியதால் தற்போது காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி உள்ளார்
பெண்கள் குற்றம்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து, பாராளுமன்றத்திலும் வெளியிலும் பிரச்சினையை எழுப்புவதில் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக ஆக்ரோஷமாக நடந்து வருகிறது.
டெல்லியில்
சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு எதிராக டிசம்பர் 14 அன்று பிரம்மாண்ட பேரணிக்ககு ஏற்பாடு செய்து வருகிறது. அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பேரணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.