தலைவரை தேர்வு செய்யும் மாநாடு.. ரத்து செய்து சாதனை படைத்த சோனியாவின் இன்னொரு மைல்கல் இதோ...!
டெல்லி: காங்கிரஸ் தலைவராக 19 ஆண்டுகள் பதவி வகித்து வந்த சோனியா காந்தி தற்போது மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அக்கட்சியின் நீண்ட கால தலைவர் என்ற பெருமையை பெறுகிறார்.
காங்கிரஸ் கட்சியானது மிகவும் பாரம்பரிய கட்சியாகும். கடந்த 1885-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இதன் முதல் தலைவர் உமேஷ் சந்திர பானர்ஜி ஆவார். ஆண்டுதோறும் மாநாடுகளை நடத்தி தலைவரை தேர்வு செய்யும் நடைமுறை இக்கட்சியில் இருந்தது.
இந்த நிலையில் இந்த கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.
கட்சியினர் தேர்வு
இந்த நிலையில் நேற்றைய தினம் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. ஆனால் இதில் நேரு குடும்பத்தை சாராத தலைவர்களை தேர்வு செய்வதில் ஒருமித்த கருத்துகள் நிலவாததால் மீண்டும் சோனியாவையே இடைக்காலத் தலைவராக கட்சியினர் தேர்வு செய்துள்ளனர்.
பெருமை
சோனியாகாந்தி ஏற்கெனவே காங்கிரஸ் தலைவராக 19 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். தற்போது மீண்டும் இவரே தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இவரே நீண்ட கால தலைவராக பதவி வகித்தவர் என் பெருமையை பெறுகிறார்.
புதிய தலைவர்
கட்சியின் முதல் தலைவரான உமேஷ் சந்திர பானர்ஜி பொறுப்பேற்ற காலத்திலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை தலைவரை மாற்றும் வழக்கம் அக்கட்சியில் இருந்தது. இதனால் ஆண்டுக்கு ஒருவர் புதிய தலைவராக பதவி வகிப்பார்.
முக்கியத் தலைவர்கள்
அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு ஓராண்டு தலைமை வகித்தவர்களுள் தாதாபாய் நவ்ரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, மதன்மோகன் மாலவியா, அன்னி பெசன்ட், லாலா லஜபதி ராய், மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், சுபாஷ் சந்திர போஸ், அபுல் கலாம் ஆசாத், ஜேபி கிரிபாலனி ஆகியோர் முக்கிய தலைவர்களாவார்.
4 முறை நேரு தலைவர்
1928-ஆம் ஆண்டு கொல்கத்தா மாநாட்டில் மோதிலால் நேரு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் லாகூர், லக்னோ, ஃபைஸ்பூர் ஆகிய மாநாட்டில் 1929, 1930, 1936, 1937 ஆகிய 4 முறை தலைவராக ஜவஹர்லால் நேரு தேர்வு செய்யப்பட்டார்.
மீண்டும் இந்திரா
பின்னர் பல்வேறு தலைவர்கள் தேர்வான நிலையில் டெல்லியில் நடந்த சிறப்பு கூட்டத்தில் 1959-இல் இந்திரா காந்தி தலைவராக தேர்வானார். இதைத் தொடர்ந்து காமராஜ் 1964, 65, 66, 67 ஆகிய 4 முறை அக்கட்சியின் தலைவராக தேர்வாகியிருந்தார். மீண்டும் இந்திரா காந்தியே மீண்டும் 1978-ஆம் ஆண்டு முதல் 1984-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இதையடுத்து ராஜீவ்காந்தி 1985- ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகளுக்கு தலைவராக இருந்தார்.
2017-இல் ராகுல்
இதைத் தொடர்ந்து 1998-ஆம் ஆண்டு சோனியாகாந்தியின் கைக்கு காங்கிரஸ் கட்சி சென்றது. அவர் 2017-ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் அப்பதவி வகித்தார். பின்னர் கட்சியின் 87ஆவது தலைவராக ராகுல்காந்தி 2017-ஆம் ஆண்டு தலைவரானார்.
ராஜினாமா
பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் 2019-இல் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் மீண்டும் யார் தலைவர் என்ற கேள்வி எழுந்து கட்சியில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் மீண்டும் அப்பதவியை சோனியாவே ஏற்றுக் கொண்டார்.
19 ஆண்டுகள்
காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என பலமுறை காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்திருந்தாலும் சோனியா காந்தியே நீண்டகாலம் தலைவராக பதவியில் இருப்பது பெரும் சாதனையாகும். மேலும் 2000 முதல் 2009-ஆம் ஆண்டு வரை மாநாடு நடத்துவதை முதல் முறையாக கைவிட்டவர் சோனியாதான். இவரது பணி சிறக்க நாமும் வாழ்த்துவோம்.