பெரும் எதிர்பார்ப்பு.. அதிரடி பாய்ச்சலில் சோனியா காந்தி.. காங். முதல்வர்களுடன் இன்று சந்திப்பு
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களை இடைக்கால தலைவரான பிறகு இன்று முதல் முறையாக சந்தித்து பேச உள்ளார்.
அப்போது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நல்லாட்சி வழங்குவது குறித்தும் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியான காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை மாற்றுவது குறித்தும் ஆலோசனை வழங்குவார் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அவருக்கு பதில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
காங்கிரஸ் கட்சி கடினமான காலகட்டத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில் காங்கிரஸ கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மற்றும் தலைவர்களை அழைத்து கட்சியை வலுப்படுத்துவது குறித்து சோனியா காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார்.
114 நாட்களில் 10-வது முறையாக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி !
மேலும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை எப்படி கொண்டாடுவது என்பது குறித்தும் விவாதித்தார். அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சோனியா காந்தி, "நாம் ஆட்சியில் இருக்கும் பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நமக்கு சிறப்பான பொறுப்பு உள்ளது. இந்த மாநில அரசுகள் உணர்வு பூர்வமாக மற்றும் பொறுப்புணர்வோடு , வெளிப்படை நிர்வாகத்தை அளிப்பதில் முன்னுதாரணமாக திகழ வேண்டும்" என்றார்.
இந்நிலையில் தான் சோனியா காந்தி இன்று மாலை தனது இல்லத்தில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை சந்திக்க உள்ளார். காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் மற்றும் நல்லாட்சி வழங்குவது மற்றும் அந்த மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பது போன்றவை குறித்து சோனியா காந்தி ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.