வேட்பாளர்கள் தேர்வு.. தேசிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி தென்னிந்திய கட்சிகள் அசத்தல்
டெல்லி: மக்களுக்கு சேவை செய்ய வந்தாலும் அரசியல்வாதிகளுக்கும் குறைந்தபட்ச கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடப்பு மக்களவை தேர்தலில் படித்த வேட்பாளர்களை அதிக அளவில் களமிறக்கி தென்னிந்திய கட்சிகள் அசத்தியுள்ளன.
தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்களவை தேர்தல்களில், படித்த வேட்பாளர்களை அதிக அளவில் போட்டியிட செய்துள்ள முதல் 5 கட்சிகள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள மக்களவை தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களில் குறைந்தபட்சம் 48% பேர் பட்டபடிப்பு முடித்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தான் படித்த வேட்பாளர்களுக்கு அதிகம் வாய்ப்பு வழங்கிய கட்சிகளில் முதலிடத்தில் உள்ளது. இக்கட்சியின் சார்பில் மக்களவை தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில், 88% படித்தவர்கள் ஆவர். அதற்கு அடுத்த இடத்தில் 87.5 % படித்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்து திமுக உள்ளது.
மூன்றாவது இடத்தில் 86.4 % படித்த வேட்பாளர்களை கொண்டஅதிமுகவும், நான்காம் இடத்தில் 82.4 % படித்த வேட்பாளர்களை கொண்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும், ஐந்தாவது இடத்தில் 80 % படித்த வேட்பாளர்களை களமிறக்கி நாம் தமிழர் கட்சியும் உள்ளன.
மே 23... நெருங்கும் உச்சகட்ட கிளைமாக்ஸான 'அரசியலின் ஜீரோ அவர்'.. என்ன செய்வார் ஜனாதிபதி?
தேசிய கட்சிகளில் காங்கிரஸ் அதிகளவில் படித்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது இக்கட்சி சார்பாக 75.7 % படித்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் 74.5 % படித்த வேட்பாளர்களை கொண்டுள்ளது. அதற்கடுத்த வரிசைகளில் பிஜூ ஜனதா தளம்71.4 % , ஆம்ஆத்மி 71.4 % , பா.ஜ.க 70.8 % கல்வி தகுதி கொண்ட வேட்பாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளன.
நடந்து முடிந்துள்ள 6 கட்ட தேர்தல்களில் மிக குறைந்த கல்வி தகுதி அல்லது படிக்காத வேட்பாளர்கள் என 139 பேர் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் 111 பேர் சுயேச்சைகள் ஆவர். பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, திமுக ஆகிய கட்சிகளின் சார்பில் தலா ஒரு வேட்பாளர் மட்டுமே படிப்பறிவு இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.