தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே கேரளாவில் தொடங்க வாய்ப்பு - இந்தியா வானிலை மையம் சொன்ன நல்ல செய்தி
தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டு முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நல்ல செய்தி சொல்லியுள்ளது.
டெல்லி: தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு மே 31ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இப்போது அந்தமான் கடலில் ஏற்பட்ட மாற்றமும், அங்கிருந்து வீசும் காற்றின் தன்மையும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். கடந்த இரண்டு ஆண்டுகாலமாகவே பருவமழை இயல்பான அளவு பெய்துள்ளதால் அணைகள் நிரம்பியுள்ளன.
கொரோனா போர் நிகழும் போது ஆயுதப்போர் தேவையா?.. இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் குறித்து வைரமுத்து!
கடந்த இரண்டு ஆண்டுகாலமாக உணவு தானிய உற்பத்தியும் அபரிமிதாக உள்ளது. கொரோனா காலத்தில் வேலையிழப்பு ஏற்பட்டாலும் பருவமழை நன்றாக பெய்து விவசாய உற்பத்தி நெல், உணவு தானிய விளைச்சல் நன்றாக இருந்தது. தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் தென்மேற்குப் பருவமழை இயல்பான அளவாக இருக்கும் என்று கடந்த ஏப்ரல் மாதமே இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து அறிவித்தது.
நாட்டின் பருவமழைக் காலம்
நடப்பாண்டு ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை நீண்ட கால சராசரியின் 98 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்திருந்தது. ஒடிசா, பீகார், ஜார்கண்ட், வடக்கு-சத்தீஸ்கர், கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் அசாம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளைத் தவிர்த்து, நாட்டின் மற்ற எல்லா பகுதிகளிலும் மழை சராசரி அளவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மே 31ல் பருவமழை தொடங்கும்
நடப்பாண்டுக்கான பருவ மழை ஜூன் 1 ஆம் தேதி சரியாக துவங்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய புவி அறிவியல் துறை செயலர் ராஜீவன் தனது ட்விட்டர் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார், இந்த ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் கேரளாவிலிருந்து பருவமழை தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் மே 31ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அந்தமானில் பருவமழை ஆரம்பம்
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2020 வரை தென்மேற்கு பருவமழை தொடக்கம் குறித்தும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது. இதில் 2015ஆம் ஆண்டை தவிர மற்ற அனைத்து ஆண்டுகளிலும் கணிப்பு சரியாக இருந்துள்ளது. பருவமழையை பொறுத்தவரை தெற்கு அந்தமான் பகுதியில் முதலில் மழை பெய்யத் தொடங்கும்.
ஒருநாள் முன்னதாக மழை ஆரம்பம்
அதன்பிறகு வங்கக்கடலில் வடமேற்கு திசையை நோக்கி பருவமழை காற்று திரும்பும். வழக்கமாக அந்தமான் பகுதியில் மே 22ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் நடப்பாண்டில் மே 21ஆம் தேதியே பருவமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை மையமாக வைத்து பார்க்கும் போது கேரளா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் பருவமழை ஒருநாள் முன்கூட்டியே தொடங்கும் என்று தெரிகிறது.
பருவமழை எப்படி இருக்கும்
இந்த பருவமழை தொடர்பான விரிவான கணிப்புகள் மற்றும் அறிவிப்புகள் இம்மாத இறுதியில் வானிலை ஆய்வு மையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எவ்வாறு இருக்கும் என்று கடந்த மாதமே இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி ஜூன் - செப்டம்பர் காலகட்டத்தில் பருவமழையானது இயல்பான அளவு மழையை தரும்.
எத்தனை சதவிகிதம் மழை பொழிவு
அதாவது 98 சதவிகித அளவிற்கு மழை பொழியும். இதில் 5 சதவிகிதம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பெய்வதற்கும் வாய்ப்புள்ளது. கடந்த 1961 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் LPA எனப்படும் நீண்ட கால மழைப்பொழிவு 88 செ.மீ ஆக இருந்தது. இதில் 96 முதல் 104 சதவிகிதமாக இருக்கும் பட்சத்தில் அதனை சராசரி மழைப்பொழிவு என்று அழைக்கின்றனர்.