தென்மேற்கு பருவமழைக்கான சூழல் 3 நாட்களில் தொடங்கும்... இந்திய வானிலை மையம் ஜில் ஜில் அறிவிப்பு!
டெல்லி: தென்மேற்கு பருவமழை இன்னும் 3 நாட்களில் தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன் 6ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. கடந்த 2 நாட்களாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் பலத்த மழை பெய்துவருகிறது.
இது பருவமழைக்கான அறிகுறி என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் தென்மேற்கு பருவமழை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது,
சாதக சூழல்
அதன்படி தென்மேற்கு பருவமழைக்கு சாதகமான சூழல், தெற்கு வங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அறிவிப்பு
பருவமழை ஆரம்பிப்பதற்கு சாதகமான சூழல் மே 19 மற்றும் 20ஆம் தேதி நிலவும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் அடுத்த மூன்று நாட்களில் தொடங்கும் என தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ஜூன் 6ல் தொடங்கும்
வழக்கமாக தென்மேற்கு பருவமழை மே இறுதி வாரத்தில் தொடங்கும் எனவும், ஆனால் இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழை ஜூன் 6ல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுஙம் மழை
தென்மேற்கு பருவமழையின் போது கேரள மாநிலம் அதிக மழை பொழிவை பெறும் என்றும் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒரு சில இடங்களில் மழை
மேலும் தமிழகத்தில் நிலவும் அனல் காற்று அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.