காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்புக்கு சமாஜ்வாதி, திரிணாமுல் காங். திடீர் ஆதரவு
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை 6 மாதத்துக்கு நீட்டிக்க சமாஜ்வதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்து வருகிறது. அங்கு சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்துள்ளது. இதற்கான மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா லோக்சபாவில் தாக்கல் செய்து நிறைவேற்றினார்.
இம்மசோதாவை இன்று அமித்ஷா ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார். இம்மசோதா மீது பேசிய சமாஜ்வாதி கட்சியின் எம்,பி ராம்கோபால் யாதவ், ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பதற்கு ஆதரவு தருவதாக கூறினார்.
அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்கவும் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் வாழும் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவும் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர்.
சமாஜ்வாதியும் திரிணாமுல் காங்கிரஸும் திடீரென பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.