லோக்சபாவில் மதரீதியான முழக்கங்களுக்கு அனுமதி இல்லை: சபாநாயகர் ஓம் பிர்லா
டெல்லி: லோக்சபாவில் மதரீதியான முழக்கங்களுக்கு அனுமதி இல்லை என புதிய சபாநாயகர் ஓம் பிர்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் எம்.பிக்களாக பதவி ஏற்ற பாஜக உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே என கோஷங்களை எழுப்பினர். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தாய்மொழி தமிழில் உறுதி மொழி ஏற்றதுடன் தமிழ் வாழ்க. தந்தை பெரியார் வெல்க, திராவிடம் வெல்க என முழக்கங்களை எழுப்பி சபையை அதிர வைத்தனர்.
இந்த முழக்கங்களுக்கு எதிராகவும் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை பாஜக எழுப்பியது,. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜெய் காளி முழக்கங்களை எழுப்பினர். இடதுசாரிகள் மதச்சார்பின்மையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது:
மதரீதியான முழக்கங்களை எழுப்புவதற்கு லோக்சபா ஒன்றும் வழிபாட்டுத் தலம் அல்ல. பதாகைகள் ஏந்துவதற்கு லோக்சபா சரியான இடம் இல்லை.
அதற்காக வீதிகள் இருக்கின்றன. அங்கே போய் முழக்கமிடலாம்.. போராட்டம் நடத்தலாம். லோக்சபாவில் விமர்சனங்களை முன்வைக்கலாம்.. விவாதிக்கலாம் அது வேறு. மீண்டும் மீண்டும் முழக்கங்கள் எழுப்பப்ட்டால் நாடாளுமன்ற விதிகளின்படி சபையை நடத்துவதற்காக முயற்சிப்பேன்.
சபைகளில் விவாதங்கள் என்பவை ஒவ்வொருவிதமான சூழல்களில் நடைபெறுகின்றன. அனைத்து கட்சிகளும் என் மீது நம்பிக்கையை வைத்திருக்கின்றன. அவர்கள் என் கடமையை செய்ய விடுவார்கள் என நம்புகிறேன். தற்போதைய அரசாங்கம் முழு பெரும்பான்மை பெற்றிருக்கிறது. அதனால் அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. எம்.பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை. எம்.பிக்கள் விவாதங்களை நடத்த கோரினால் அரசு அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஓம் பிர்லா கூறினார்.