பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு
டெல்லி: மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக, சிறப்பு அதிரடிப்படை உருவாக்க உள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எப்படியாவது மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி பல்வேறு விதமான அறிவிப்புகளை அவப்போது வெளியிட்டு வருகிறது.
ஏனெனில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றில் கூட ஆம் ஆத்மி வெற்றி பெறவில்லை. 5 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது ஆம் ஆத்மி.
இதே போக்கு நீடித்தால் அடுத்தாண்டு தேர்தலில் டெபாசிட் கூட மிஞ்சாது போல என ஆம் ஆத்மிக்கு அச்சம் ஏற்பட்டு விட்டது. இதனையடுத்து பொதுமக்களை தங்கள் வசம் இழுக்க, சமீபத்தில் டெல்லியில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என டெல்லி அரசு அறிவித்தது. இன்னும் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை.
இந்நிலையில் அடுத்த கவர்ச்சி அறிவிப்பாக பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர பேருந்துகளில் கண்காணிப்பில் ஈடுட அதிரடி படை அமைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது டெல்லி அரசு.
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள டிடிசி துணைத்தலைவர் ஜாஸ் மின்ஷா, தற்போது அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள அதிரடிபடை பேருந்துகளின் உள்ளேயும், வெளியேயும் பெண்களின் பாதுகாப்புக்காக தீவிர ஆய்வு நடத்தும்.
சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி
இந்த அதிரடி படைக்கு மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார். அதிரடிப்படை குழுவில் பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வரும் தன்னார்வலர்கள், மற்றும் துறைசார் நிபுணர்கள் இடம் பெற உள்ளனர்.
மேலும் பேருந்தில் சிசிடிவி கேமரா பொருத்துவது ,அவசர உதவிக்கான பட்டன்களை பொருத்துவது, பேருந்துகளில் பாதுகாப்பு படை வீரர்களை நிறுத்துவது உள்ளிட்டவற்றுக்கும் டெல்லி அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.