சென்னை டூ அந்தமான் ஃபைபர் கேபிள் இணையதள திட்டம் துவக்கம்.. இது சிறப்பான நாள்- பிரதமர் மோடி பெருமிதம்
டெல்லி: ஃபைபர் கேபிள் இணைப்பு உருவாகியுள்ளதன் மூலம், அந்தமான் நிகோபார் தீவு மக்களுக்கு, இன்று சிறப்பான நாள் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
Recommended Video
சென்னையையும், அந்தமான் போர்ட்பிளேரையும் கடல் வழியாக நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம் மூலம் இணைக்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்த கேபிள், சென்னையையும், போர்ட் பிளேரையும், சுவராஜ் தீவு, லிட்டில் அந்தமான், கார்நிக்கோபார், கமோர்ட்டா, கிரேட் நிக்கோபார், லாங் தீவு, ரங்கத் தீவுகளையும் இணைக்கிறது.
சென்னை- அந்தமானை இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம்: தொடங்கி வைத்தார் மோடி
அடிக்கல்
இந்த நீர்மூழ்கி கேபிள் திட்டத்துக்கு 2018ம் ஆண்டு, டிசம்பர் 30ம் தேதி போர்ட்பிளேரில், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து 2,300 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,224 கோடியில் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டு இன்று, காணொலி காட்சி மூலம், இத்திட்டத்தை டெல்லியிலிருந்தபடி துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
வேலைவாய்ப்பு
இந்த திட்டத்தால், அந்தமானில், வலுவான, அதிவேக தொலைத்தொடர்பு, பிராட்பேண்ட் இணையதள சேவை வசதிகள் கிடைக்க உள்ளது. அந்தமான் தீவுகளில் சுற்றுலா, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி ட்வீட்
இந்த துவக்க விழாவில் பங்கேற்கும் முன்பாக, பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட்டில், "இன்று, ஆகஸ்ட் 10. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும், சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு சிறப்பான நாள். அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை" வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாபெரும் மாற்றம்
முன்னதாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பாஜக தொண்டர்களுடன் நேற்று, ஞாயிற்றுக்கிழமை உரையாடிய பிரதமர், இந்த வசதி தொடங்கப்பட்ட பின்னர் அந்தமான் தீவுகளில் இணைய இணைப்பு மாபெரும் மாற்றத்தை சந்திக்கும் என்று கூறினார்.