புதியவகை கொரோனா முன்பு தடுப்பூசி ஜுஜுபி.. கலக்கத்தில் உலக நாடுகள்
டெல்லி: புதிய வகை வைரஸுக்கு எதிராக தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருக்கும் என நிபுணர்கள் கருதுவதால் உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளன.
எல்லா வைரஸ்களையும் போலவே, SARS-COV-2 வைரஸும் ஆயிரக்கணக்கான மாறுபாடுகளைக் கொண்டுள்ளன. அவை வேகமாக உருமாறி புதிய வடிவங்களை எடுக்கின்றன.
உருமாறும் புதிய வைரஸ் வேகமாக பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி, அதிக அளவிலான தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்துவதே ஆகும்.
புதிய கொரோனா
இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் புதிய வகை வைரஸுக்கு எதிராக தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருக்கும் என நிபுணர்கள் கருதுவதால், உலக நாடுகள் பீதியில் உள்ளன.
உருமாறும் கொரோனா
கொரோனா பல்வேறு வடிவங்களில் வீரியமாக உருமாறும் இந்த சூழலில், மக்களுக்கு அதிக அளவு தடுப்பூசி செலுத்தும் பணி என்பது இந்த உலகத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகும். எனினும், புதிய வகை கொரோனா குறித்து இந்திய மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
விழிப்புணர்வு அவசியம்
ஆனால் ஒட்டுமொத்த நாடே விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா தொற்று, இந்தியாவில் இதுவரை 150 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கடந்த சனிக்கிழமை உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் நாம் காண முடிகிறது.
இங்கிலாந்து வைரஸ்
இங்கிலாந்தில் பரவும் கொரோனா வைரஸ் வகை "501.Y.V1" என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஜனவரி 8ம் தேதி கனடாவின் ஆண்டாரியோ பகுதியில் உள்ள குடியிருப்பில் வீட்டு வேலை செய்த ஒருவருக்கு இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது. அடுத்த இரண்டு வாரத்தில், அதே குடியிருப்பில் வசிக்கும் 129 பேருக்கு தொற்று ஏற்பட, அதில் 32 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.
செம ஸ்பீட்
அப்படியெனில், இதன் பரவல் வேகமும், மரணம் ஏற்படும் வேகமும் இந்த அளவுக்கு உள்ளன என்பதை யூகித்துக் கொள்ளுங்கள். இப்படி ஒரு புது வகை கொரோனா உருவாகியுள்ளது என்பதே, டிசம்பர் மாதம் தான் வெளிச்சத்துக்கு வந்தது. அமெரிக்க நிபுணர்களின் கணிப்பின்படி, வரும் மார்ச் மாதம் அமெரிக்காவில் இந்த வைரஸ் உச்சத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது வேற இது வேற
அதேசமயம், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் வேறு வகையான கொரோனா வைரஸ் பரவுகிறது. அவை முறையே, "501.Y.V2" மற்றும் "501.Y.V3" என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக, தென்னாப்பிரிக்காவில் பரவும் 501.Y.V2 வைரஸ் கனடா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் உள்ளிட்ட உலகின் இரண்டு டஜன் நாடுகளில் பரவிவிட்டது. ஆனால், இந்த வகை வைரஸுக்கு எதிராக கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறைவாகவே இருக்கும் என்பதே அச்சம் கொள்ள செய்கிறது.