திருடர்கள் பலவிதம்.. ஒவ்வொருவரும் ஒருவிதம்.. டெல்லியில் ‘ஸ்பைடர்மேன்’ திருடன் கைது!
மாடிகளில் மட்டுமே திருடும் ஸ்பைடர் மேன் திருடனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
டெல்லி: டெல்லியில் முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் மட்டுமே திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த வினோதமான திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருடர்களுக்குள்ளும் பல வினோதமானவர்கள் பற்றி நாம் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்போம். பெண்களின் உள்ளாடைகளை திருடுவது, குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களைத் திருடுவது, பணக்காரர்களாக இருந்தபோதும் சிறிய பொருட்களை மட்டும் திருடுபவர்கள் என வினோத திருடர்கள் பலவகை.
அந்தவகையில் மாடிகளில் மட்டுமே திருடுவதை வழக்கமாகக் கொண்ட திருடனைப் போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் டெல்லி திலக் நகர் பகுதியைச் சேர்ந்த ரவி (23).
பாக். தொலைக்காட்சிகளில் இந்திய சினிமா, நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப தடை
வினோத திருடன்:
தரைத்தள வீடுகளில் திருடுவது ரவிக்கு பிடிக்காதாம். இதனால் முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் உள்ள வீடுகளில் மட்டுமே தொடர்ந்து திருடி வந்துள்ளான். வெளிப்புறச் சுவர் வழியாக மாடிக்கு ஏறி, வீடுகளின் திறந்த வராண்டா அல்லது பால்கனிகளை பயன்படுத்தி வீடுகளின் உள்ளே நுழைவதை ரவி வழக்கமாக செய்து வந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விசாரணை:
இது தொடர்பாக டெல்லி டிஜிபி மோனிகா பரத்வாஜ் கூறுகையில், ‘நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்ட காவல்நிலையங்களுக்கு நாங்கள் விரைந்தோம். அங்கு இருந்த குற்றவாளிகள் பட்டியலையும், புகார்கள் குறித்த தகவல்களையும் விசாரித்தோம். இதில் அனைத்து இடங்களிலும் ஒரே பாணியில் திருடப்பட்டது தெரிய வந்தது.
சிசிடிவி காட்சிகள்:
இதையடுத்து சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் திருடனை தேடி வந்தோம். அப்போது இந்தத் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது ரவி என்பது தெரியவந்தது. சுபாஷ் நகரில் உள்ள பசிபிக் மாலில் வைத்து ரவியைக் கைது செய்தோம்' எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்பைடர்மேன் திருடன்:
வீட்டின் பால்கனியில் ஏறி அறைக்குள் செல்ல வடிகால் குழாய்களை பயன்படுத்தி வந்துள்ளான் ரவி. இதனால் அவனை ‘ஸ்பைடர்மேன் திருடன்' என போலீசார் அழைக்கின்றனர். ரவிக்கு ஏன் இப்படி ஒரு வினோதப் பழக்கம் என்பது குறித்து தெரியவில்லை.
6 வழக்குகள்:
கீர்த்தி நகரில் பதிவு செய்யப்பட்ட 7 திருட்டு வழக்குகளில், 6 வழக்குகளில் ரவி சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து ரவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.