ஆக.5-ல் இலங்கை நாடாளுமன்ற தேர்தல்.. செம பலத்துடன் வெல்லப் போகும் ராஜபக்சே.. இந்தியாவுக்கு நெருக்கடி?
டெல்லி: இலங்கையில் மிக கடுமையான கொரோனா நெருக்கடிகளுக்கு இடையே ஆகஸ்ட் 5-ந் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அத்தனை எதிர்க்கட்சிகளும் ஆளுக்கு ஒரு திசையில் நெல்லிக்காய் மூட்டை போல சிதறிக் கிடப்பதால் சர்வ வல்லமையுடன் மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராவது உறுதியாகி இருக்கிறது. அப்படி ராஜபக்சே மீண்டும் பிரதமராவது என்பதில் இந்தியாவுக்கு மிகப் பெரிய நெருக்கடிகள் காத்திருக்கின்றன என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
இலங்கை அரசியலில் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சிதான் பிரதான சிங்கள கட்சிகளாக இருந்தன. இதே கால கட்டத்தில் ஈழத் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்துகிற தமிழரசு கட்சி உள்ளிட்டவைகளும் இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்களின் கட்சிகளும் அரசியல் களத்தில் இருந்து வந்தன.
ஒருகட்டத்தில் இலங்கை அரசில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக ஈழத் தமிழர்களின் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவானது. இதுதான் கடந்த பல ஆண்டுகளாக தமிழர்களின் அடையாளமாக இருந்து வந்தது. ஆனால் தற்போதைய இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முற்றிலும் வினோதமான காட்சிகளுடன் களேபரமாக இருக்கிறது.
ஒரு மாதமாக பகிரப்பட்ட உளவுத்தகவல்.. அமெரிக்கா அனுப்பிய மெசேஜ்.. இந்தியாவிற்கு கிடைத்த அதிரடி உதவி
ராஜபக்சே ராஜ்ஜியம்
இலங்கையில் அரசாண்ட சுதந்திர கட்சியானது மரணப்படுக்கையில் இருக்கிறது. அப்படி ஒரு கட்சி இருப்பதற்கான சுவடே இல்லை. இத்தனைக்கும் இந்த கட்சியின் தற்போதைய தலைவராக இருப்பவர் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன. சிறிலங்கா சுதந்திர கட்சியை உதறி தள்ளிவிட்டு அல்லது சிறிலங்கா சுதந்திர கட்சியால் உதறப்பட்ட மகிந்த ராஜபக்சே குடும்பமோ சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற முன்னணியை உருவாக்கி இருக்கிறது.
வெற்றியின் பக்கத்தில் ராஜபக்சே
அதாவது ராஜபக்சே குடும்பத்தினரை தலைவர்களாக 100% ஏற்றுக் கொண்டவர்கள் நிறைந்தது இந்த கட்சி. சுதந்திரா கட்சியைப் போல இங்கே ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக சலசலப்பை காட்ட யாரும் இல்லை. அதிபர் நாற்காலியில் கோத்தபாயவை உட்கார வைத்தநிலையில் எந்த ஒரு நெருக்கடியிலும் சிக்காமல் தாங்கள் நினைத்த சிங்கள பவுத்த பேரினவாத அரசாங்கத்தை முழுமையாக செயல்படுத்த முனைப்புடன் களத்தில் இருக்கிறது சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னணி. களத்தில் வெற்றி காற்றும் இந்த திசையை நோக்கித்தான் இருக்கிறது.
பிளவுபட்ட ஐதேக
ஏனெனில் ராஜபக்சேவை எதிர்க்கக் கூடிய ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டுக் கிடக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை கட்டமைத்திருக்கும் சஜித் பிரேமதாச தனி அணியாக இருக்கிறார். தென்னிலங்கையில் சிங்கள வாக்காளர்கள் மத்தியில் இந்த பிளவுபட்ட சூழ்நிலை நிச்சயம் 200% ராஜபக்சேவின் கட்சிக்கு மட்டுமே சாதகமான சுனாமி அலையை உருவாக்கித் தரும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. மலையகத் தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரையில் இந்த சிங்களர் கட்சிகளுடன் இணைந்திருப்பதால் அவர்கள் ஒன்றும் தீர்மானிக்கிற சக்தியாக இருக்கப் போவதும் இல்லை.
தமிழர்களிடையே பிளவு
வடக்கு, கிழக்கில் ஈழத் தமிழர்களும் இஸ்லாமியர்களும்தான் தீர்மானிப்பவர்கள். ஆனால் ஒருங்கிணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது இந்த தேர்தலில் காணாமல் போய்விட்டது. தமிழ் தலைவர்கள் ஆளுக்கொரு அரசியல் கட்சியை தொடங்கி களத்தில் நிற்கின்றனர். இவர்களுடன் டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் மற்றும் இஸ்லாமியர் கட்சிகளும் களத்தில் இருக்கின்றன. கடந்த காலங்களைப் போல பெரும் எண்ணிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே வெற்றி பெறப் போவது இல்லை என்பதும் தெளிவாகிவிட்டது. அதாவது தெற்கு இலங்கையில் சிங்களர் ஒட்டுமொத்தமாக ராஜபக்சேவுக்கே வாக்களிக்க தீர்மானமாக உள்ளனர். ஆனால் வடக்கு, கிழக்கில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒரே பிரதிநிதியாக தேர்வு செய்ய யாரும் களத்தில் இல்லை.
சிங்களர் ஆட்சி
இதனால்தான் ராஜபக்சே குடும்பம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது. கடந்த காலங்களில் தமிழர்கள், இஸ்லாமியர்கள் கொத்தாக குறிப்பிட்ட இடங்களைப் பெற்று எதிர்க்கட்சியாக கூட அமர்ந்து இருந்தார்கள். அதனால் ஒருவித அனுசரணைப் போக்கை அரசு வெளிப்படுத்தி வந்தது. இப்போது அதற்கான இடமே இல்லை. தாங்கள் வைத்ததே சட்டம் என்ற நிலையை இயல்பாகவே தமிழர்களும் இஸ்லாமியர்களும் சிங்களருக்கு உருவாக்கி கொடுத்துவிட்டனர்.
இந்தியாவுக்கு நெருக்கடி
இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் எந்த ஒன்றின் பெயராலும் இனிவரும் காலங்களில் இலங்கை அரசை நெருக்கடிக்குள்ளாக்கவும் முடியாது. மாறாக, தாம் விரும்பும் சீனாவுடனும் இன்னபிற நாடுகளுடன் அப்படித்தான் கைகோர்ப்போம்.. நீ என்ன செய்வ? என எகத்தாளமாக கேள்வி கேட்கிற ஆணவ அரசுதான் அமையும். இது நிச்சயம் இந்தியாவுக்கு மிக மோசமான நெருக்கடியை தரக் கூடியதாகவும் அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.