இலங்கை தேர்தல் முடிவு: அதிபராகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
Recommended Video
டெல்லி: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா- இலங்கை இடையிலான சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்த பணியாற்றுவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் சனிக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி சார்பில் சஜித் பிரேமதாசாவும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி கட்சி சார்பில் கோத்தபய ராஜபக்சேவும் போட்டியிட்டனர்.
மொத்தம் பதிவான 80 சதவீத வாக்குகளில் கோத்தபய ராஜபக்சே 50 சதவீத வாக்குகளும், சஜித் பிரேமதாசா 43 சதவீத வாக்குகளும் பெற்று இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 50 சதவீத வாக்குகளுக்கு மேல் கோத்தபய பெற்று இருப்பதால் அவரது வெற்றி உறுதியாகி உள்ளதுடன் அதிபராவது உறுதியாகி உள்ளது.
அதிபராகும் முன்னாள் ராணுவ அமைச்சர்.. என்ன செய்வார் கோத்தபய ராஜபக்சே? தமிழர்களின் நிலை என்ன?
இதையடுத்து இலங்கையின் அண்டை நாடான இந்தியா இந்த தேர்தலைமிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தது. இந்த சூழலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி , இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations @GotabayaR on your victory in the Presidential elections.
— Narendra Modi (@narendramodi) November 17, 2019
I look forward to working closely with you for deepening the close and fraternal ties between our two countries and citizens, and for peace, prosperity as well as security in our region.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள உங்களுக்கு(கோத்தபய) என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நம்முடைய இரு நாடுகளுக்கும் (இந்தியா மற்றும் இலங்கை) குடிமக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், நமது பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே தேர்தலில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்துள்ள சஜித் பிரேமதாசா, அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவுசெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.