கொரோனா: அவசரப்பட்டு ஆட்சியை கலைத்து விழிக்கும் கோத்தபய.. இலங்கை பொதுத் தேர்தல் மறுபடி தள்ளி வைப்பு?
டெல்லி: ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்புக்கான வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக இலங்கையின் தேசிய தேர்தல் ஆணைய தலைவர் மஹிந்த தேசப்பிரியா தெரிவித்துள்ளார். எனவே தேர்தல் தள்ளிப் போகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மஹிந்த தேசபிரியா மேலும் கூறுகையில், தேர்தல்களை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் ஜூன் 2 ம் தேதி அறிவிக்கப்பட்டன, ஆனால் அவை சட்டப்பூர்வமாக்கப்படவில்லை.
இப்போது வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் தோளோடு தோள் சேர்த்து பிரச்சாரம் செய்கிறார்கள், அவர்கள் தேவையான ஒரு மீட்டர் தூரத்தை பராமரிக்கவில்லை. அவர்கள் முகக் கவசத்தை கூட அணியவில்லை.
சுகாதார வழிகாட்டுதல்களில் முகக் கவசம் அணிவது, அடிக்கடி கை கழுவுதல் மற்றும் ஒரு மீட்டர் தூரத்தை பராமரித்தல் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இலங்கை நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது, முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது கொரோனா தொற்றுநோய் காரணமாக பிரச்சாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளது.
அதிபர் கோத்தபய ராஜபக்ஷ மார்ச் 2 ம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்தார். ஆட்சி நிறைவடைய ஆறு மாதங்கள் இருந்தபோதிலும், அவர் முன்கூட்டியே ஆட்சியை கலைத்து தேர்தலை எதிர்கொள்ள தயாரானார்.
முன்னதாக, ஏப்ரல் 25 ம் தேதி வாக்கெடுப்பு நடத்த அதிபர் விரும்பினார். ஆனால், தேர்தல் ஆணையம் தேர்தல்களை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்து ஜூன் 20ம் தேதி தேர்தல் நடத்தலாம் என கூறியது.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஜூன் 20 ம் தேதியும் வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று ஆணையம் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்தது. மேலும் தேர்தல் கமிஷன் உறுப்பினர்களிடையே ஒருமித்த முடிவைத் தொடர்ந்து புதிய தேதியாக ஆகஸ்ட் 5ம் தேதி தேர்வு செய்யப்பட்டது.
'ட்ரிபிள் லாக்டவுன்..' கர்நாடக அரசு கையில் எடுக்கும் ஆயுதம்.. பெங்களூர் தனித் தீவாகும் வாய்ப்பு
இலங்கை நாட்டில் 1.6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும்.
இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மிக உயர்ந்த கொரோனா கேஸ்களை பதிவு செய்துள்ளது. நாட்டின் வட மத்திய பிராந்தியத்தில் இருந்து போதைக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் மட்டும் 300 கேஸ்கள் பதிவாகியுள்ளன. இலங்கையில் 11 இறப்புகளுடன் 2,454 கொரோனா கேஸ்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான், தேர்தல் ஆணையர் மறுபடியும் தேர்தலை தள்ளி வைப்பது போல கருத்து கூறியுள்ளார்.
இதனிடையே, 24 சமூக பரவல் உட்பட 170 புதிய கொரோனா நோய் பதிவு செய்யப்பட்ட நிலையில், சிங்கப்பூரின் மொத்த கொரோனா எண்ணிக்கை 45,783ஐ எட்டியுள்ளது. இந்த தகவலை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமூக பரவல் என 7 சிங்கப்பூர் குடிமக்கள், அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் (வெளிநாட்டினர்) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.